வெள்ளி, 30 ஜூலை, 2021

இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021 - சி.ஆர்.செந்தில்வேல்

 இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021

- சி.ஆர்.செந்தில்வேல் 


மத்திய அரசு கடந்த 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் 

இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வரைவை கொண்டுவந்தது.    

இந்திய நாடு முழுவதும் உள்ள மீனவர்களும் அரசியல் இயக்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கைவிட்டது. 

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021 என்ற பெயரில் இச்சட்டத்தை மீண்டும் மூன்றாவது முறையாக கொண்டு வருகிறது .

 இந்த சட்டம் இந்திய மீனவர்களின் நலனை முன்னிறுத்தியோ"

இந்திய கடல் வளத்தை மேலாண்மை செய்தல் பற்றிய அக்கறையாலோ, கொண்டுவரப்படவில்லை,மாறாக

1982 ல் சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்ட கடல் எல்லை குறித்த ஒப்பந்த்திற்கு பின் இந்தியாவிற்கு 2.02 பில்லியன் சதுர கிலோமீட்டர் கடல்பரப்பு கொண்ட பிரத்தியோக பொருளாதார மண்டல கடல் பகுதி EEZ ( Exclusive economic zone)உருவானது,

இந்திய கடல் மண்டலப் (EEZ) பகுதியில் எவ்வாறு மீன்பிடித் தொழில் செய்ய வேண்டும், எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த வகை மீன்களை பிடிக்க வேண்டும்,

எந்த வகை சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும், என்கிற வரையறைகளை சர்வதேச நாடுகளின் அமைப்பாக இருக்க கூடிய FAO என்று அழைக்க கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புதான் தீர்மானிக்கிறது,

FAOவில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூடி 1995ல் ரோமில் உருவாக்கிய பொறுப்பார்ந்த மீன்பிடிப்பிற்கான சர்வதேச நடத்தை விதிகளை இந்தியா ஏற்றுக் கொண்டது.

2001 ஆம் ஆண்டின் தோஹா சுற்று முதல் உலக வர்த்தக அமைப்பில் மீன்வள மானியங்கள் குறித்த முடிவுகளும், இந்தியாவின் மீன்பிடி கொள்கையை சர்வதேச கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது

இதன் தொடர்ச்சியாக

இந்தியா தனது மீன்பிடி கொள்கையை சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட மீன்பிடி ஒப்பந்தங்களில் அடிப்படையில், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு தனது தேசிய கடல் மீன்பிடி கொள்கையை உருவாக்கிய கொள்கிறது,

இதன் பின்னணியில் 

உலக மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்தும் 

 உடன்படிக்கை குறித்து விவாதிக்க WTO உறுப்பு நாடுகளின் அனைத்து வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் கடந்த 2021 ஜூலை 15 அன்று கூட்டியது. 104 நாட்டின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் கலந்து கொண்டார் இந்தக் கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்பட்ட. அம்சம், உலக கடல் வளத்தில் 60% மீன்கள் அறுவடை செய்யப்பட்டு விட்டதாகவும், அதை முறை படுத்துவதற்கு உலகளாவிய மீன்பிடித் தொழிலுக்கு புதிய விதிகளை அமைக்க வேண்டும், குறிப்பாக வளரும் நாடுகள் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு கொடுக்கும் மீன்பிடித் தொழிலுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், என நிர்பந்தம் கொடுத்தது, மேலும் 

மீன்வள மானியங்கள் தொடர்பான உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகள் 2001 ஆம் ஆண்டில் தோஹாவில் தொடங்கப்பட்டன, அதன் தொடர்ச்சியாக 12 வது அமைச்சர்கள் மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2021 நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறும்.   

அதற்கு முன்பாக இந்திய தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு வழங்குகின்ற மானியங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும். அத்துடன் கடுமையான சட்டங்கள் மூலம் கடலில் மீன் அறுவடை செய்யும் முறையை குறைக்கவேண்டும், அதற்கு மாற்றாக கடலில் மீன் வளர்க்கும் (MARICULTURE - முறையை ஊக்கப்படுத்த வேண்டும் , இந்த பின்புலத்தில்தான் மத்திய அரசு அவசர அவசரமாக இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முனைப்பு காட்டுகிறது  

ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்த நாடுகள் சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர் மீன்வள மானியங்களை அவர்கள் நாட்டு மீனவர்களுக்கு வழங்குகின்றன, அவற்றில் இரண்டில் ஒரு பங்கு ஆலை கப்பல் வைத்திருக்கும் வணிக மீனவர்களுக்கு செல்கிறது, 

இந்தியாவில் ஆண்டுக்கு 770 கோடி மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது, 

அதிலும் 50% மானியம்,  

ஆலை கப்பல் வைத்திருக்கிற முதலாளிகளுக்கு சென்று சேர்கிறது, 

உலகில் உள்ள கடல் வளத்தில் ஆண்டுக்கு 70 சதவீதத்தை மிகப்பெரிய ஆலை கப்பல்கள் சுரண்டுகின்றன, வெறும் 30% மீன்களை மட்டும் தான் உலகத்தில் இருக்கக்கூடிய பலகோடி பாரம்பரிய மீனவர்கள் பிடிக்கின்றனர்,

WTO விவாதப் பொருளாக இருக்கின்ற (IUU) Illegal, Unreported and Unregulated fishing 

 சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல்,

என்கிற என்கிற பிரச்சனையும் அதனை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களும், யார் மீது பாய வேண்டும் என்று சொன்னாள், 

அதி நவீன வசதிகளைக் கொண்டிருக்கக்கூடிய உலகம் முழுவதும் உள்ள பகாசுர மீன்பிடி கப்பல்கள் மீது பாய வேண்டும்,   

இந்திய அரசு தற்போது கொண்டு வருகிற சட்டமானது.. பகாசுர மீன் பிடிக்கப் கப்பலையும் சாதாரண கட்டு மரத்தையும் , 

ஒரே அளவுகோலில் பார்க்கிற சட்டமாக உள்ளது,  

WTO நடத்திய சர்வதேச அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய நமது தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள், வளர்ந்த நாடுகள் அவர்களது நாட்டு மீன்பிடி தொழிலுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்தாமல், இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது நிர்பந்தம் கொடுப்பதை சுட்டிக்காட்டி பேசினார், அவரது பேச்சு வளரும் நாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றது, ஆனாலும் நமது அமைச்சரின் பேச்சுக்கும் அவரது செயலுக்கும் வேறுபாடு அதிகம், இறுதியில் WTO நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து போவதற்கு இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டு வருகின்ற இந்த சட்டம் ஒன்றே சாட்சி போதும் ,

இந்தியாவில் நாட்டுப் படகுகள் விசைப் படகுகள் என இரண்டு லட்சம் படகுகளும்,

2 கோடி மீனவர்கள் கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், இவர்களின் எதிகாலம் பற்றி பேசுவதைவிட கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் உள்ள சூரை மீனை பிடிப்பது, கடலில் பண்ணை அமைத்து மீன்வளர்ப்பது, அதற்காக கடல்பரப்பில் பிளாட் போட்டு தனியாருக்கு கொடுப்பது, போன்ற விசயங்களைதான் தேசிய கொள்கை , அதிகம் பேசுகிறது,

தற்போது மத்திய அரசு கொண்டு வரும் சட்டம்,

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 கடல் மைல் கொண்ட

பிராந்திய பகுதி கடல் நீருக்கு அப்பால் உள்ள 200 கடல் மைல் தூரம் கொண்ட பிரத்தியேக பொருளாதார மண்டல EEZ ( Exclusive economic zone)

பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக விதி முறைகளை வகுக்க இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கடலோர மாநில அரசுகளும் தங்களது பிராந்திய கடல் பகுதிகளை நிர்வாகம் செய்ய தங்களுக்கென்று மாநில அளவிலான சட்டங்களை இயற்றி நிர்வகித்து வருகிறது, தமிழகத்திலும், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983, நடைமுறையில் உள்ளது,

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மீனவர்கள் இதுபோன்ற மாநில அரசுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு தங்களது மீன்பிடித் தொழிலை பிராந்திய கடல் பகுதி மட்டுமல்லாமல் இந்தியாவினுடைய பொருளாதார மண்டலங்களை (EEZ) நோக்கியும் அதனை தாண்டி சர்வதேச கடல் எல்லை வரை சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்,

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தற்போது கொண்டு வருகிற இந்த சட்டத்தின் மூலம் 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்றால்,

மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்..!

அதனுடைய சாராம்சம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான சிறு மீனவர்கள் 12 கடல் மைல் தூரம் கொண்ட பிராந்திய கடல் எல்லையை தாண்ட கூடாதென வலியுறுத்துகிறது.

மேலும் பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்க வேண்டுமென்று சொன்னால் மத்திய அரசு அறிவிக்கும் கடல்வள மேலாண்மை திட்டங்களுக்கு உட்பட்டும், சர்வதேச மீன்பிடி கொள்கைகளுக்கு உட்பட்டும், மீன் பிடிக்க வேண்டும்..! இல்லை என்றால் அனுமதி இல்லை..!


 மீன்பிடி தொழிலை பொருத்தவரைக்கும் விவசாயத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தொழில் நாட்டினுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிற ஒரு தொழில், இந்த தொழிலுக்கு உலக நாடுகள் முழுவதும் மானியங்கள் கொடுத்து ஊக்குவித்து, கொண்டிருக்கும்போது இந்திய அரசு மீன்பிடி தொழிலுக்கும் பிடிக்கின்ற மீனுக்கும், கட்டணம் நிர்ணயிப்பது ஆச்சரியத்தையும்,அதிர்ச்சியையும், ஏற்படுத்துகிறது, ஏற்கனவே மத்திய அரசின் GST,வரிவிதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் மீன்பிடித்தொழில் மேலும் அழிவை நோக்கி போகும் என்பதில் ஆச்சரியமில்லை"

மேலும் பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்கக் கூடிய படகுகளின் தரம் அளவு போன்றவை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது குறிப்பாக இந்திய வாணிப கப்பல் சட்டம் 1958 கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு மட்டும்தான் அனுமதி கிடைக்கும்..!

அனுமதி இல்லாமல் மீன் பிடித்தாலோ அல்லது மத்திய அரசு கொண்டு வரும் மீன் வள மேலாண்மை திட்டங்களை மீறினாலோ மீனவர்களுக்கு அபதாரம் மற்றும் தண்டனை கொடுப்பது என்று இச்சட்டம் கூறுகிறது,


மீன்பிடி தொழிலின் போது படகுகளை சோதனை செய்கிற அதிகாரத்தை மீன்வளத் துறையிலிந்து இந்திய கடலோர காவல் படைக்கு இச்சட்டம் அதிகாரத்தை கைமாற்றி கொடுக்கிறது..! அதாவது சிவில் நிர்வாகத்திடம் இருந்து ராணுவத்திற்கு அதிகாரம் கை மாற்றப்படுகிறது, 

கூடுதலாக இச்சட்டத்தை அமலாக்கம் செய்ய தனி ஆணையம் அமைக்க வேண்டும் என மசோதா பரிந்துரைக்கிறது,

சோதனையிட வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் இந்திய மீனவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும் வெளிநாட்டு மீனவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் விதிக்கலாம் என்கிற சரத்தும் இச்சட்டத்தில் உள்ளது ,

உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க

'தண்டனை', 'அபராதம்', 'கைது', 'பறிமுதல்' என மீனவ மக்களை அச்சுறுத்தக்கூடிய வார்த்தைகள் தான் மேற்படி சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. மக்களுக்கு நன்மை புரிவதற்காக சட்டம் இயற்றப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மக்களை துன்புறுத்துவதற்காகவே சட்டம் இயற்றப்படும் என்பதை மத்திய அரசு தனது இச்சட்டம் மூலம் நிரூபித்து இருக்கிறது.


இந்திய எல்லையில் அனுமதிபெற்று மீன்பிடிக்கும் பன்னாட்டு கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்று தனி சட்டம் உள்ளது, அச்சட்டத்தின் பெயர் இந்திய கடல் மண்டலத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் மீன் பிடித்தலை ஒழுங்கமைப்பு செய்யும் சட்டம் 1981, தற்போது அச்சட்டம் ரத்து செய்யப்பட்டு மத்திய அரசு இப்போது கொண்டு வருகிற இந்த சட்டத்தின் மூலமே வெளிநாட்டு கப்பல்களை ஒழுங்கு படுத்த வழிவகை செய்கிறது,

LOP (Letter of Permission) மூலம் பன்னாட்டு மீன்பிடி கப்பல்கள் இந்திய அரசிடம் அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன அதை போக்கி ஒற்றை சாரள (single window system) முறையிலான வசதியை செய்து

எந்த விதத் தங்கு தடையுமின்றி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இந்திய நாட்டு எல்லைக்குள் வந்து இந்திய மீன்வளத்தை கொள்ளையிட இந்திய அரசின் பல்வேறு கொள்கைகள் வழி வகுக்கிறது, அதில் எவ்வித மாற்றமும் செய்ய முன்வராத நமது மத்திய அரசு,இந்திய மீனவர்களுக்கு மட்டும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து பாரம்பரிய மீனவர்களை அழிவு நிலைக்கு கொண்டு செல்கிறது,

மொத்தத்தில்

வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில் கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதே நிதர்சன உன்மை ,


தோழமையுடன்

சி.ஆர்.செந்தில்வேல்

மாநில செயலாளர்

9940817745

தமிழ்நாடு AITUC மீனவத்தொழிலாளர் சங்கம்,

இராமேஸ்வரம்.