வெள்ளி, 30 ஜூலை, 2021

இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021 - சி.ஆர்.செந்தில்வேல்

 இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021

- சி.ஆர்.செந்தில்வேல் 


மத்திய அரசு கடந்த 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் 

இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வரைவை கொண்டுவந்தது.    

இந்திய நாடு முழுவதும் உள்ள மீனவர்களும் அரசியல் இயக்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கைவிட்டது. 

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021 என்ற பெயரில் இச்சட்டத்தை மீண்டும் மூன்றாவது முறையாக கொண்டு வருகிறது .

 இந்த சட்டம் இந்திய மீனவர்களின் நலனை முன்னிறுத்தியோ"

இந்திய கடல் வளத்தை மேலாண்மை செய்தல் பற்றிய அக்கறையாலோ, கொண்டுவரப்படவில்லை,மாறாக

1982 ல் சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்ட கடல் எல்லை குறித்த ஒப்பந்த்திற்கு பின் இந்தியாவிற்கு 2.02 பில்லியன் சதுர கிலோமீட்டர் கடல்பரப்பு கொண்ட பிரத்தியோக பொருளாதார மண்டல கடல் பகுதி EEZ ( Exclusive economic zone)உருவானது,

இந்திய கடல் மண்டலப் (EEZ) பகுதியில் எவ்வாறு மீன்பிடித் தொழில் செய்ய வேண்டும், எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த வகை மீன்களை பிடிக்க வேண்டும்,

எந்த வகை சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும், என்கிற வரையறைகளை சர்வதேச நாடுகளின் அமைப்பாக இருக்க கூடிய FAO என்று அழைக்க கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புதான் தீர்மானிக்கிறது,

FAOவில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூடி 1995ல் ரோமில் உருவாக்கிய பொறுப்பார்ந்த மீன்பிடிப்பிற்கான சர்வதேச நடத்தை விதிகளை இந்தியா ஏற்றுக் கொண்டது.

2001 ஆம் ஆண்டின் தோஹா சுற்று முதல் உலக வர்த்தக அமைப்பில் மீன்வள மானியங்கள் குறித்த முடிவுகளும், இந்தியாவின் மீன்பிடி கொள்கையை சர்வதேச கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது

இதன் தொடர்ச்சியாக

இந்தியா தனது மீன்பிடி கொள்கையை சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட மீன்பிடி ஒப்பந்தங்களில் அடிப்படையில், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு தனது தேசிய கடல் மீன்பிடி கொள்கையை உருவாக்கிய கொள்கிறது,

இதன் பின்னணியில் 

உலக மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்தும் 

 உடன்படிக்கை குறித்து விவாதிக்க WTO உறுப்பு நாடுகளின் அனைத்து வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் கடந்த 2021 ஜூலை 15 அன்று கூட்டியது. 104 நாட்டின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் கலந்து கொண்டார் இந்தக் கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்பட்ட. அம்சம், உலக கடல் வளத்தில் 60% மீன்கள் அறுவடை செய்யப்பட்டு விட்டதாகவும், அதை முறை படுத்துவதற்கு உலகளாவிய மீன்பிடித் தொழிலுக்கு புதிய விதிகளை அமைக்க வேண்டும், குறிப்பாக வளரும் நாடுகள் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு கொடுக்கும் மீன்பிடித் தொழிலுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், என நிர்பந்தம் கொடுத்தது, மேலும் 

மீன்வள மானியங்கள் தொடர்பான உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகள் 2001 ஆம் ஆண்டில் தோஹாவில் தொடங்கப்பட்டன, அதன் தொடர்ச்சியாக 12 வது அமைச்சர்கள் மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2021 நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறும்.   

அதற்கு முன்பாக இந்திய தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு வழங்குகின்ற மானியங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும். அத்துடன் கடுமையான சட்டங்கள் மூலம் கடலில் மீன் அறுவடை செய்யும் முறையை குறைக்கவேண்டும், அதற்கு மாற்றாக கடலில் மீன் வளர்க்கும் (MARICULTURE - முறையை ஊக்கப்படுத்த வேண்டும் , இந்த பின்புலத்தில்தான் மத்திய அரசு அவசர அவசரமாக இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முனைப்பு காட்டுகிறது  

ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்த நாடுகள் சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர் மீன்வள மானியங்களை அவர்கள் நாட்டு மீனவர்களுக்கு வழங்குகின்றன, அவற்றில் இரண்டில் ஒரு பங்கு ஆலை கப்பல் வைத்திருக்கும் வணிக மீனவர்களுக்கு செல்கிறது, 

இந்தியாவில் ஆண்டுக்கு 770 கோடி மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது, 

அதிலும் 50% மானியம்,  

ஆலை கப்பல் வைத்திருக்கிற முதலாளிகளுக்கு சென்று சேர்கிறது, 

உலகில் உள்ள கடல் வளத்தில் ஆண்டுக்கு 70 சதவீதத்தை மிகப்பெரிய ஆலை கப்பல்கள் சுரண்டுகின்றன, வெறும் 30% மீன்களை மட்டும் தான் உலகத்தில் இருக்கக்கூடிய பலகோடி பாரம்பரிய மீனவர்கள் பிடிக்கின்றனர்,

WTO விவாதப் பொருளாக இருக்கின்ற (IUU) Illegal, Unreported and Unregulated fishing 

 சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல்,

என்கிற என்கிற பிரச்சனையும் அதனை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களும், யார் மீது பாய வேண்டும் என்று சொன்னாள், 

அதி நவீன வசதிகளைக் கொண்டிருக்கக்கூடிய உலகம் முழுவதும் உள்ள பகாசுர மீன்பிடி கப்பல்கள் மீது பாய வேண்டும்,   

இந்திய அரசு தற்போது கொண்டு வருகிற சட்டமானது.. பகாசுர மீன் பிடிக்கப் கப்பலையும் சாதாரண கட்டு மரத்தையும் , 

ஒரே அளவுகோலில் பார்க்கிற சட்டமாக உள்ளது,  

WTO நடத்திய சர்வதேச அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய நமது தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள், வளர்ந்த நாடுகள் அவர்களது நாட்டு மீன்பிடி தொழிலுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்தாமல், இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது நிர்பந்தம் கொடுப்பதை சுட்டிக்காட்டி பேசினார், அவரது பேச்சு வளரும் நாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றது, ஆனாலும் நமது அமைச்சரின் பேச்சுக்கும் அவரது செயலுக்கும் வேறுபாடு அதிகம், இறுதியில் WTO நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து போவதற்கு இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டு வருகின்ற இந்த சட்டம் ஒன்றே சாட்சி போதும் ,

இந்தியாவில் நாட்டுப் படகுகள் விசைப் படகுகள் என இரண்டு லட்சம் படகுகளும்,

2 கோடி மீனவர்கள் கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், இவர்களின் எதிகாலம் பற்றி பேசுவதைவிட கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் உள்ள சூரை மீனை பிடிப்பது, கடலில் பண்ணை அமைத்து மீன்வளர்ப்பது, அதற்காக கடல்பரப்பில் பிளாட் போட்டு தனியாருக்கு கொடுப்பது, போன்ற விசயங்களைதான் தேசிய கொள்கை , அதிகம் பேசுகிறது,

தற்போது மத்திய அரசு கொண்டு வரும் சட்டம்,

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 கடல் மைல் கொண்ட

பிராந்திய பகுதி கடல் நீருக்கு அப்பால் உள்ள 200 கடல் மைல் தூரம் கொண்ட பிரத்தியேக பொருளாதார மண்டல EEZ ( Exclusive economic zone)

பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக விதி முறைகளை வகுக்க இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கடலோர மாநில அரசுகளும் தங்களது பிராந்திய கடல் பகுதிகளை நிர்வாகம் செய்ய தங்களுக்கென்று மாநில அளவிலான சட்டங்களை இயற்றி நிர்வகித்து வருகிறது, தமிழகத்திலும், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983, நடைமுறையில் உள்ளது,

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மீனவர்கள் இதுபோன்ற மாநில அரசுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு தங்களது மீன்பிடித் தொழிலை பிராந்திய கடல் பகுதி மட்டுமல்லாமல் இந்தியாவினுடைய பொருளாதார மண்டலங்களை (EEZ) நோக்கியும் அதனை தாண்டி சர்வதேச கடல் எல்லை வரை சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்,

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தற்போது கொண்டு வருகிற இந்த சட்டத்தின் மூலம் 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்றால்,

மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்..!

அதனுடைய சாராம்சம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான சிறு மீனவர்கள் 12 கடல் மைல் தூரம் கொண்ட பிராந்திய கடல் எல்லையை தாண்ட கூடாதென வலியுறுத்துகிறது.

மேலும் பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்க வேண்டுமென்று சொன்னால் மத்திய அரசு அறிவிக்கும் கடல்வள மேலாண்மை திட்டங்களுக்கு உட்பட்டும், சர்வதேச மீன்பிடி கொள்கைகளுக்கு உட்பட்டும், மீன் பிடிக்க வேண்டும்..! இல்லை என்றால் அனுமதி இல்லை..!


 மீன்பிடி தொழிலை பொருத்தவரைக்கும் விவசாயத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தொழில் நாட்டினுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிற ஒரு தொழில், இந்த தொழிலுக்கு உலக நாடுகள் முழுவதும் மானியங்கள் கொடுத்து ஊக்குவித்து, கொண்டிருக்கும்போது இந்திய அரசு மீன்பிடி தொழிலுக்கும் பிடிக்கின்ற மீனுக்கும், கட்டணம் நிர்ணயிப்பது ஆச்சரியத்தையும்,அதிர்ச்சியையும், ஏற்படுத்துகிறது, ஏற்கனவே மத்திய அரசின் GST,வரிவிதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் மீன்பிடித்தொழில் மேலும் அழிவை நோக்கி போகும் என்பதில் ஆச்சரியமில்லை"

மேலும் பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்கக் கூடிய படகுகளின் தரம் அளவு போன்றவை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது குறிப்பாக இந்திய வாணிப கப்பல் சட்டம் 1958 கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு மட்டும்தான் அனுமதி கிடைக்கும்..!

அனுமதி இல்லாமல் மீன் பிடித்தாலோ அல்லது மத்திய அரசு கொண்டு வரும் மீன் வள மேலாண்மை திட்டங்களை மீறினாலோ மீனவர்களுக்கு அபதாரம் மற்றும் தண்டனை கொடுப்பது என்று இச்சட்டம் கூறுகிறது,


மீன்பிடி தொழிலின் போது படகுகளை சோதனை செய்கிற அதிகாரத்தை மீன்வளத் துறையிலிந்து இந்திய கடலோர காவல் படைக்கு இச்சட்டம் அதிகாரத்தை கைமாற்றி கொடுக்கிறது..! அதாவது சிவில் நிர்வாகத்திடம் இருந்து ராணுவத்திற்கு அதிகாரம் கை மாற்றப்படுகிறது, 

கூடுதலாக இச்சட்டத்தை அமலாக்கம் செய்ய தனி ஆணையம் அமைக்க வேண்டும் என மசோதா பரிந்துரைக்கிறது,

சோதனையிட வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் இந்திய மீனவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும் வெளிநாட்டு மீனவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் விதிக்கலாம் என்கிற சரத்தும் இச்சட்டத்தில் உள்ளது ,

உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க

'தண்டனை', 'அபராதம்', 'கைது', 'பறிமுதல்' என மீனவ மக்களை அச்சுறுத்தக்கூடிய வார்த்தைகள் தான் மேற்படி சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. மக்களுக்கு நன்மை புரிவதற்காக சட்டம் இயற்றப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மக்களை துன்புறுத்துவதற்காகவே சட்டம் இயற்றப்படும் என்பதை மத்திய அரசு தனது இச்சட்டம் மூலம் நிரூபித்து இருக்கிறது.


இந்திய எல்லையில் அனுமதிபெற்று மீன்பிடிக்கும் பன்னாட்டு கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்று தனி சட்டம் உள்ளது, அச்சட்டத்தின் பெயர் இந்திய கடல் மண்டலத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் மீன் பிடித்தலை ஒழுங்கமைப்பு செய்யும் சட்டம் 1981, தற்போது அச்சட்டம் ரத்து செய்யப்பட்டு மத்திய அரசு இப்போது கொண்டு வருகிற இந்த சட்டத்தின் மூலமே வெளிநாட்டு கப்பல்களை ஒழுங்கு படுத்த வழிவகை செய்கிறது,

LOP (Letter of Permission) மூலம் பன்னாட்டு மீன்பிடி கப்பல்கள் இந்திய அரசிடம் அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன அதை போக்கி ஒற்றை சாரள (single window system) முறையிலான வசதியை செய்து

எந்த விதத் தங்கு தடையுமின்றி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இந்திய நாட்டு எல்லைக்குள் வந்து இந்திய மீன்வளத்தை கொள்ளையிட இந்திய அரசின் பல்வேறு கொள்கைகள் வழி வகுக்கிறது, அதில் எவ்வித மாற்றமும் செய்ய முன்வராத நமது மத்திய அரசு,இந்திய மீனவர்களுக்கு மட்டும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து பாரம்பரிய மீனவர்களை அழிவு நிலைக்கு கொண்டு செல்கிறது,

மொத்தத்தில்

வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில் கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதே நிதர்சன உன்மை ,


தோழமையுடன்

சி.ஆர்.செந்தில்வேல்

மாநில செயலாளர்

9940817745

தமிழ்நாடு AITUC மீனவத்தொழிலாளர் சங்கம்,

இராமேஸ்வரம்.  




 


 

வெள்ளி, 18 ஜூன், 2021

மீன்பிடி தொழிலில் பின்னடைவை சந்திக்கும் தமிழம்

 மீன்பிடி தொழிலில்

பின்னடைவை சந்திக்கும் தமிழம்


தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதிமுக்கிய தொழில்களில் மீன் பிடித் தொழிலும் ஒன்று. 11 லட்சத்திற்கும் அதிகமான மீனவ மக்கள், உள்நாட்டு மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் என பலலட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை அளித்தும் பெரும்பான்மை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கியும், குறிப்பிடத்தக்க வருவாயினை குறிப்பாக அந்நிய செலாவணியை ஈட்டியும், மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கையில் மீன்பிடித் தொழில் பெரும் பங்கு வகிக்கிறது.இத்தொழிலை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், கடந்த 50 ஆண்டுகளாக எந்த முயற்சியையும் அரசுகள் எடுக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தை ஆட்சிசெய்த திமுக,அதிமுக அரசுகள் மீனவர்களை கண்டுகொள்ளவில்லை.ஒட்டுமொத்த இந்திய கடற்கரையான 7516 கி.மீட்டர் நீளத்தில் 1076 கி.மீட்டர் நீளமுடைய நாட்டிலேயே இரண்டாவது கடல் வளத்தை கொண்டிருக்கக்கூடிய தமிழக மீன்பிடித்தொழில், மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகளின் மோசமான கொள்கை, ஊழல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்திய நாட்டிலேயே முன்னணியில் இருந்த தமிழக மீன்பிடிப்பு தற்போது அதன் முன்னணி வரிசையை இழந்து 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.


மீன்பிடியில் தமிழகம் பின்னுக்கு போகமுக்கியக் காரணம் மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த 50 ஆண்டுகளாக அரசுகள் நிறைவேற்றவில்லை. மிக நீண்ட கடற்கரையை கொண்ட தமிழகத்தில் பெரிய துறைமுகம் என்றால் சென்னை, தூத்துக்குடி, சின்னமுட்டம் ஆகிய துறைமுகங்கள் மட்டுமே.நடுத்தர மீன்பிடித் துறைமுகம் நான்கும் இதர மீன் இறங்குதளங்கள் 300ம் உள்ளன. ஆனால் இவைகளில் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் எதுவுமில்லை. இயற்கை சீற்றக் காலங்களில் மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க வசதிகள் இல்லை. இதனால் தமிழகத்தை விட பாதியளவு கடற்கரை நீளம் கொண்ட கேரள மாநிலம் மீன்பிடிப்பில் இந்திய அளவில் முதலிடத்தில் வளர்ச்சி பெற்றது. தேர்தல் நேரத்தில் தமிழகத்தை ஆட்சிசெய்த கட்சிகள், மீனவர்களின் வாக்குவங்கியை கவர பல்வேறு வாக்குறுதியை வழங்கின. ஆனால், அவை இன்று வரை கடலில் கரைத்த பெருங்காயமாகவே கரைந்துபோனது. கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தொடரும் இலங்கை கடற்படை தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை காக்க தவறினார்கள். தற்போது மத்தியில் மோடி அரசுபதவியேற்றபின் மேலும் இவை தீவிரமடைந்துள்ளது. ஆனால் தற்போதைய முதல்வரும் முன்னாள் முதல்வரும் கடிதம் எழுதுவதிலும் மீனவர் பிரச்சனை முன்னுக்கு வரும் போது கட்சத்தீவை மீட்பேன் என வாய்ச்சவடால் விடுவதுமே தொடருகிறது. இப்பிரச்சனையை தீர்க்க இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை துவக்குவது, இலங்கை- இந்திய கடற்பரப்பில் குறிப்பாக பாக்.ஜலசந்தியின் மீன்பிடிப்பை ஒழுங்கமைப்பது மாற்றுத் தொழிலான ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான ஆக்கப்பூர்வமான திட்டமிடல் ஆகியவற்றை தமிழக அரசுகள் செய்யத் தவறின.


மீன்வளம் 

 

 தமிழக கடல் வளத்தைப் பாதுகாப்பதில் தொடர்ந்து தமிழகஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. கடலோர நகரங்களில் குப்பைக் கழிவுகள், சாக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் தங்குதடையின்றி கலக்குகின்றன. ஆறுகள் அனைத்தும் ரசாயனமயமாகி போயின. கடற்கரையோரத்தில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலை கழிவுகள்கடலில் கலக்கின்றன. தாதுமணல் கொள்ளையால் கடற்கரை நிலமும், வளமும் சூறையாடப்பட்டது. கடலுக்குள்ளும் இரட்டை மடி, சுருக்குமடி வெடிவைத்து மீன் பிடித்தல் போன்ற தங்கு தடையற்ற மீன்பிடிப்பு தொடர்கிறது. மேலும், இந்திய எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட அந்நியக் கப்பல்கள் வருகையால் ஆழ்கடலிலிருந்து கரை நோக்கி வரும் மீன்வளம் சுரண்டப்படுகிறது. அந்நியக் கப்பல்களை அனுமதிக்க மத்திய அரசை திமுக, அதிமுக அரசுகள் எதிர்க்கும் திறனற்று அவர்களின் பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தும் ஆட்சியாளர்களாக மாறிப் போனார்கள்.

அட்டை, சங்கு மீதான தடை

 

கன்னியாகுமரி முதல் நாகை மாவட்டம் வரை அட்டை, சங்குகுளி தொழிலாளர் பல லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதத்தில் திமுகவின் முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடல் அட்டை மற்றும் சில சங்கு வகைக்கு தடை விதித்தார். அந்தத் தடையை நீக்க வலியுறுத்தி மீனவர்கள் நீண்ட போராட்டம் நடத்தியும் திமுகவின் மத்திய அமைச்சர்கள் தடையை நீக்கவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் அட்டை,சங்கு மீதான தடையை நீக்க பாடுபடுவேன் என ஜெயலலிதா சூளுரைத்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதற்காகஒருமுறை கூட மத்திய அரசை வலியுறுத்தவில்லை. மாறாக, மாநில காவல்துறையும், மாநில வனத்துறையும் கடல் அட்டை பிடித்ததாக ஏராளமான மீனவர்களை கைதுசெய்து சிறையில் தள்ளின. மீனவர்களின் வாழ்வுரிமை மற்றும்மாநில உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றும் ஜி.ஆர்.இசட் போன்ற சட்டங்களை இரண்டு அரசுகளுமே தமிழகத்தில் அமல்படுத்தியது. வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு சர்வதேச விலையில் வரியில்லா எரிபொருள் வழங்குவதுபோல் நமது மீனவர்களுக்கும் டீசல்-மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருளை வரி நீக்கம் செய்து தேவையான அளவுகொடுக்க வேண்டுமென கோரும், மீனவர்களின் கோரிக்கையை இரண்டு கட்சிகளின் ஆட்சிகளுமே கண்டுகொள்ளவில்லை. இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படைந்து கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டருடன் கூடிய மீட்புக்குழு அமைக்கத் தவறினார்கள். வெளிநாடு சென்று பிழைக்கப் போகும் மீனவர்கள் துயரடையும் போது அவர்களை மீட்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

உள்நாட்டு மீனவர்-விற்பனையாளர்கள்

 

தமிழகத்தில் ஐந்தரை லட்சம்ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு மீன்பிடிப்பில் 90 சதவீதம் அரசின் பொது நீர்நிலைகள் ஆகும். இவற்றிலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் 2.40 லட்சம் டன் மீன்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம்பேர் இத்தொழிலை நம்பியுள்ள சூழ்நிலையில் தமிழக அரசு பொது நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவக் கூட்டுறவு அமைப்புகளிடமிருந்து பறித்து யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து மீனவர்கள் பல்வேறு போராட்டம் நடத்தினர் ஆனால் அரசு செவி சாய்க்காமல், குளம், குட்டை, ஏரிகளை பணம் படைத்தவர்களுக்கு தாரை வார்த்தது அதிமுக அரசு.மேலும் 2016ஆம் ஆண்டு திருத்த சட்ட மசோதா என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து ராட்சச விசைப்படகுகளுக்கு சலுகையும் பாரம்பரிய மீனவர்களுக்கு உரிமைப் பறிப்பையும் செய்தது அதிமுக அரசு. மேலும் தமிழக மீன் வளத்துறை நிர்வாகம் அதன்மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரைஊழலில் புரையோடிப்போய் உள்ளது.இத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சிக்காலத்தில் சீரழிக்கப்பட்டது. தற்போது கூட தமிழக மீன்துறை அமைச்சரின் மீது பல்வேறு ஊழல் புகார் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கூட்டுறவு சங்கங்கள், மீனவர் நலவாரியம் என அனைத்தும் பெயரளவிலேயே உள்ளன. மீனவர்களின் சமூகப் பாதுகாப்பிற்கு உகந்த திட்டமிடலை முறையாகச் செய்யவில்லை. மீனவர்களின் உயிர்க் காப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவ உதவி, மீனவ குழந்தைகளின் கல்வி,பேறுகால உதவி, திருமண உதவி, முதியோர் உதவி என பல்வேறு உதவிக்கான அறிவிப்பு மட்டுமே உள்ளது. நடைமுறையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

1413மீனவக் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள 7 லட்சத்து 4 ஆயிரத்து 111 உறுப்பினர்களுக்கு கடந்தாண்டு மட்டும் நலவாரிய பயன்கள் வெறும் ரூ. 3.28 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.லட்சக்கணக்கில் தமிழகம் முழுவதும் உள்ள மீன்விற்பனையாளர்களுக்கு உகந்த கட்டமைப்பு வசதிகளும் சமூக நலத்திட்டங்களும் வேண்டுமென கோரிக்கைவைத்து அவை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. 


சி.ஆர்.செந்தில்வேல்

மாநில செயலாளார்

AITUC மீனவத் தொழிலாளார் சங்கம

இராமேஸ்வரம்

தொ


டர்புக்கு 9940817745


திங்கள், 7 ஜூன், 2021

தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம்

 தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம்

(சி.ஆர்.செந்தில்வேல்)


“ஒரு நாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”

படகோட்டி திரைப்படத்தில் வரும் மேற்கண்ட பாடல் வரிகள் மீனவர்களின் தேசிய கீதமாக இன்றும் உலா வருகிறது என்றால், அது மிகையில்லை. சமூகத்தில் உள்ள உடலுழைப்பு அனைத்துமே கடினமென்றாலும் ஆழ் கடல் சென்று மீன்பிடிக்கும் தொழிலாளிக்கோ அதைவிட பலநூறு மடங்கு அதிகம்.


இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, மீன் பிடி உபகரணங்களின் விலையேற்றம், பிடித்த மீனுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமை, என காலம் முழுவதும் மீனவன் சந்திக்கும் துயரங்களுடன்.. தமிழக மீனவன் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனை இலங்கை கடற்படையின் தாக்குதல். 1983ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் ஊனப்படுத்தப்பட்டனர். 

தற்போது இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இந்த 13 ஆண்டில் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது பல்வேறு தாக்குதல் களைத் தொடுத்தனர். 

இது தொடர் கதையாகுமோ என்ற அச்சமும் பீதியும், தமிழக மீனவர்களின் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது. 


பிரச்சனையின் மையம்..


இலங்கையை ஒட்டியுள்ள, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதியில் தான் தமிழகத்தின் 80 சதவீதம் மீன் பிடிப்பு உள்ளது. இந்த இரண்டு கடல் பரப்பும் மிகவும் குறுகிய எல்லைகொண் டது. தொன்றுதொட்டு இருநாட்டு மீனவர் களும் இரு கடல் பிராந்தியத்திலும் மீன் பிடித்து வந்தனர். இந்த பாரம்பரிய வழக் கத்தை மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நமது மீனவர்களுக்கு உத்தரவாதப் படுத்துவதன் மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும்.


முன்நெடுங்காலத்தில் படகுகளில் பாய்மரம் கட்டி காற்றின் விசையில், கரை யிலிருந்து கடலுக்குள், ஐந்து கடல் மைல் களுக்கு உட்புறமாகவே மீன்பிடித்தனர். தற்போது நமது கடல் பகுதியின் கடல் வளம் குறைய, குறைய, நமது மீனவர்கள் எந்திரம் பொருத்திய படகுகளில் மீன் களை தேடி 30, 40 கடல் மைல் தூரம் பய ணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிலநேரம் மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர்.

உள்நாட்டுச் சந்தையின் தேவைக்காக பெரும் பகுதி உற்பத்தி செய்யப்பட்ட நமது மீன்பிடிப்பு முறை, புதிய பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசு நடைமுறைப்படுத்திய பின், அந்நியச் செலாவணி கையிருப்புத்தேவைக்காக நமது மீன்பிடிப்பு முறை, உள்நாட்டுச் சந்தையின் தேவையைப் புறக்கணித்து விட்டு, ஏற்றுமதிக்கான மீன் உற்பத்தி முறையை நோக்கி இந்திய அரசு வளர்க்க துவங்கியது.

பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழித்து முட்டை எடுத்த கதையாக, ஏற்றுமதித் தேவைக்கான மீன்களான, இறால் கனவாய், நண்டு, சிங்கி போன்ற மீன் இனங்களை அதிகமாக பிடிக்க, அதற்குரிய மீன்பிடி தொழில் நுட்பங்களை நார்வே போன்ற நாடுகளின் உதவியுடன் நமது மீனவர்களுக்கு கற்றுக்கொடுத்தது.


இன்று உலகத்தின் பெரும்பகுதி நாடுகள், நார்வே உட்பட அந்த தொழில்நுட்பம் அபாயகரமானது என கைவிட்டுவிட்டன. இந்திய அரசு மட்டும் ஏற்றுமதி நிறுவனங் களின் தேவைக்காக அந்தத் தொழில் நுட்பங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறது. அதில் ஒரு வகைத் தொழில் நுட்பம்தான் கொல்லிமடி என்கிற ராட்சஷ இழுவலை. இந்த வலைகளை சாதாரண சிறு ஏழை மீனவன் பயன்படுத்த முடியாது. இரண்டு நவீன விசைப்படகுகள் கொண்டு இந்த வலை வைத்து மீன்பிடிக்கும் முறைக்கு மூலதனமாக ரூ.40 முதல் 50 லட்சம் வரை தேவைப்படும். இந்த வலை தொழில் நுட்பத்தை தடை செய்யக்கோரி சிறு ஏழை மீனவர்கள் நீண்டகாலமாகப் போராட்டம் நடத்தினர். அவர்கள், உச்சநீதிமன்றம் வரை அணுகி இறுதியில் இந்த வலைக்கு 1996ஆம் ஆண்டு நிரந்தர தடை உத்தரவு பெற்றனர்.


தடையை அமல்படுத்தக்கோரி மீனவர்கள் பல போராட்டங்கள் நடத்தியும் தடையுத்தரவு 1996 முதல் இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. தடை உத்தரவை இன்று வரை அரசு அமல் படுத்தவில்லை.


இந்த வசதி படைத்தவர்களிடம், மீன் துறை நிர்வாகம், பல லட்ச ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, தடை செய்யப்பட்ட இந்த வலைகளை சிறு மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி பயன்படுத்த அனுமதிக்கிறது. இவர்கள் தினசரி டன் கணக்கில் மீன்கள் பிடிப்பதன் மூலம், சிறு மீனவர்கள் பிடித்து வந்த மீன் வளம், கட்டுப்பாடின்றி சீரழிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதி பாரம்பரிய சிறு மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளையில், இன்னொரு புறத்தில் இலங்கையில் தமிழ் மீனவர்கள் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசு விதித்த கடுமையான கட்டுப் பாடுகள் காரணமாகவும், உள்நாட்டு யுத்தத்தின் பொருட்டு, வெளிநாடுகளுக்கும், உள்நாட்டுக்குள்ளும் அகதிகளாக இடம் பெயர்ந்ததன் காரணமாகவும், அவர்களது மீன்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது உள்நாட்டுக் கலவரம் முடிவுக்கு வந்தபின், இலங்கை தமிழ் மீனவர்கள் பழையபடி சுதந்திரமாக தங்களது மீன்பிடிப்பைத் துவக்கியுள்ளனர். அவர்களது மீன்பிடிப்பு முறை வளர்ச்சி அடையாமல், இந்திய மீன்பிடிப்பு முறையை விட ஐம்பது வருடம் பின்தங்கியுள்ளது.




தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்ததன் மூலமும் இந்திய-இலங்கை கடல் பிராந்தியங்களில் இருநாட்டு அரசுகளும் அந்நிய மீன்பிடிக் கப்பல்களுக்கு, தங்குதடையற்ற மீன்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதன் மூலமும், மீன்பிடித் தொழிலில் மாபெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்வளம் குறைந்து இரு நாட்டு மீனவர்களும் மீன்களைத் தேடி எல்லை தாண்ட வேண்டிய சூழல் ஏற்படுவதுடன் இருநாட்டு மீனவர்களிடையே முரண்பாடாக மோதலுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.


மாற்று திட்டமும், மோடி 

அரசின் வாய்ஜாலமும்,

இலங்கை கடற்படை உள்ளிட்ட பிரச்சினைகளில் துன்பப்படும் பாக் ஜலசந்தி மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 2016-ல் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2017-ல் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவிற்கு ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.


இந்தத் திட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க வசதியாக 80 லட்சம் மதிப்பில் படகும், பரப்பு வலையும், தூண்டில், மீன்பிடி உபகரணங்கள் கொடுக்கப்படும் என்றும், திட்ட மதிப்பில் 50 %ரூபாய் பணம் மத்திய அரசின் மானியமாகவும், 20 % ரூபாய் மாநில அரசு மானியமாகவும், 20 % ரூபாய் வங்கிக் கடனாகவும், 10 % ரூபாய் மீனவர்கள் பங்களிப்பாகவும் அளிக்கப்படும் என்றும், திட்டத்தின் படி முதல் கட்டமாக பாக் ஜலசந்தியில் உள்ள விசைப் படகுகள் வருடத்திற்கு 500 வீதம் நான்கு வருடத்திற்கு 2000 விசைப் படகுகள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றி அமைப்பது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீனவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டிய நிலையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எட்டாக் கனியாக பாரம்பரிய மீனவர்களுக்குத் தெரிகிறது.


ஏனெனில் விலைவாசி ஏற்றத்தின் நிமித்தம் அரசின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் திட்டத்தின் இன்றைய மதிப்பு ரூபாய் 1 கோடியே 10 லட்சத்தைத் தொடுகிறது, அரசு இது சம்பந்தமாக மீனவர்களையும், படகுகள் கட்டும் நிறுவனங்களையும் அழைத்து 27 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த நிலையான தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசின் நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட 18 நிறுவனங்களும் அரசு கொடுத்துள்ள 80 லட்சம் திட்ட மதிப்பில் படகினை செய்ய முடியாது என கைவிரித்த நிலையில், எப்படியாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற நோக்கில், மிகவும் ஆர்வமுள்ள பணபலம் உள்ள சிலரை அழைத்துப் பேசி அதிகாரிகள் சம்மதிக்க வைத்துள்ளார்கள்.


இப்போதுள்ள நிலவரத்தின்படி மீன்பிடி உபகரணங்கள் தவிர்த்து படகு மற்றும் இன்ஜின் உள்ளிட்டவைகள் மட்டுமே அரசின் திட்ட மதிப்பீடான 80 லட்சத்தில் செய்து தருவதாக படகு தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே மீன்பிடி வலைகளும், சாதனங்களும் மீனவர்களே சொந்தப் பணத்தில் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்த பட்சம் 5 டன் வலைகளாவது இருக்கவேண்டும். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் மற்றும் சூறைமீன் தூண்டில் உபகரணங்களுக்கு ரூ.5 லட்சம் வேண்டும். ஆக மொத்தம் மேற்கொண்டு ரூ.30 லட்சம் வரை மீனவர்கள் செலவு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். மொத்தத்தில் மீனவர் பங்களிப்பாக இந்தத் திட்டத்தில் வங்கிக் கடனாக ரூ.16 லட்சமும், திட்ட பங்களிப்பாக ரூ.8 லட்சமும், உபரி பங்களிப்பாக ரூ.30 லட்சமும் ஆக மொத்தம் 54 லட்சம் மீனவர்கள் முதலீடு செய்தால் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலை உள்ளது.


இலங்கை கடற்படையால் தனது படகினையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்க்கும் பாரம்பரிய மீனவர்களால் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே இந்த ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது.


எனவே இந்தத் திட்ட மதிப்பினை ரூ.1 கோடியே 10 லட்சமாக உயர்த்த வேண்டும் அல்லது முன்பு இந்திய-நார்வே திட்டத்தின் கீழ் அரசாங்கமே படகுகள் கட்டி பாரம்பரிய மீனவர்களுக்கு கொடுத்தது போல் கொடுத்தால் மட்டுமே இந்தத் திட்டம் வெற்றிபெறும் என அரசிடமும், அரசு அதிகாரிகளிடமும் மீனவர்கள் முறையிட்டு வருகிறார்கள்.


ஆனால் இதற்கு மாறாக இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை என்றால், இந்தத் திட்டத்தை பிற இடங்களில் உள்ள வணிக ரீதியான மீனவர்களிடம் கொடுத்துவிடுவோம் என்று அதிகாரிகள் பாக் ஜலசந்தி பாரம்பரிய மீனவர்களை நெருக்குகிறார்கள். ஏற்கெனவே இறால் பண்ணைகள், மீனவர்களுக்கான மாற்றுமுறை மீன்பிடிப்பு முறை என அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்று பெருமுதலாளிகள் மட்டுமே கடற்கரைகளைக் கைப்பற்றி இறால் பண்ணை தொழில் செய்துவருகிறார்கள்.


அதுபோன்றே தற்போது பாரம்பரிய மீனவர்கள் செயல்படுத்த முடியாதவாறு ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அறிவித்து விட்டு, அதை மீனவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்று கூறி பாரம்பரிய மீனவர் அல்லாத பெருமுதலாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளை கொடுக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.


மத்திய அரசின் கொள்கை முடிவின் படி பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையால் துன்பப்படும் பாரம்பரிய மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடி வழிமுறை ஏற்ப்படுத்தவும், பாக் ஜலசந்தி பகுதியில் இழுவைப் படகுகளைக் குறைத்து, கடல்வளத்தை பாதுகாக்கவுமே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவர்களைத் தவிர்த்து பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்ற உள்ளடி வேலைகள் விரைவாக நடக்கிறது.


எனவே மத்திய அரசு, பாரம்பரிய மீனவர்கள் பலன்பெறும் வகையில் திட்ட மதிப்பை ரூ.1 கோடியே 10 லட்சமாக மாற்றவேண்டும் அல்லது இந்திய-நார்வே மீன்பிடி திட்டத்தில் கொடுத்தது போல அரசே ஆழ்கடல் மீன்பிடி படகினைக் கட்டி மீனவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தனது ராஜாங்க ரீதியான நிர்ப்பந்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வலியுறுத்தியும், கச்சத்தீவையொட்டியுள்ள இலங்கை கடல்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை பெற்றுத்தரக்கோரியும், இந்திய அரசு கடைப்பிடிக்கும் உலகமயம், தாராளமயம் போன்ற உழைக்கும் மக்களுக்கு விரோதமான பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாக, இந்திய கடல் பிராந்தியத்தில் அனுமதிக்கப்பட்ட அந்நிய மீன்பிடிக் கப்பலுக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஏற்றுமதியை நோக்கிய மீன் உற்பத் திக்காக இந்திய அரசால் வளர்த்து விடப் பட்ட, நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட கொல்லிமடி போன்ற வலைகளை முற்றிலுமாக தடுக்கக்கோரியும், மீனவர் கள் அணிதிரண்டு போராடுவதன் மூலமே இப்பிரச்சனைக்கு இறுதித்தீர்வு கிடைக்கும்.


 கட்டுரையாளர்

சி.ஆர்.செந்தில்வேல்

மாநில செயலாளர்

தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்

இராமேஸ்வரம்


தொலைபேசி 9940817745