தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம்
(சி.ஆர்.செந்தில்வேல்)
“ஒரு நாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”
படகோட்டி திரைப்படத்தில் வரும் மேற்கண்ட பாடல் வரிகள் மீனவர்களின் தேசிய கீதமாக இன்றும் உலா வருகிறது என்றால், அது மிகையில்லை. சமூகத்தில் உள்ள உடலுழைப்பு அனைத்துமே கடினமென்றாலும் ஆழ் கடல் சென்று மீன்பிடிக்கும் தொழிலாளிக்கோ அதைவிட பலநூறு மடங்கு அதிகம்.
இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, மீன் பிடி உபகரணங்களின் விலையேற்றம், பிடித்த மீனுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமை, என காலம் முழுவதும் மீனவன் சந்திக்கும் துயரங்களுடன்.. தமிழக மீனவன் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனை இலங்கை கடற்படையின் தாக்குதல். 1983ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் ஊனப்படுத்தப்பட்டனர்.
தற்போது இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இந்த 13 ஆண்டில் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது பல்வேறு தாக்குதல் களைத் தொடுத்தனர்.
இது தொடர் கதையாகுமோ என்ற அச்சமும் பீதியும், தமிழக மீனவர்களின் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது.
பிரச்சனையின் மையம்..
இலங்கையை ஒட்டியுள்ள, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதியில் தான் தமிழகத்தின் 80 சதவீதம் மீன் பிடிப்பு உள்ளது. இந்த இரண்டு கடல் பரப்பும் மிகவும் குறுகிய எல்லைகொண் டது. தொன்றுதொட்டு இருநாட்டு மீனவர் களும் இரு கடல் பிராந்தியத்திலும் மீன் பிடித்து வந்தனர். இந்த பாரம்பரிய வழக் கத்தை மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நமது மீனவர்களுக்கு உத்தரவாதப் படுத்துவதன் மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும்.
முன்நெடுங்காலத்தில் படகுகளில் பாய்மரம் கட்டி காற்றின் விசையில், கரை யிலிருந்து கடலுக்குள், ஐந்து கடல் மைல் களுக்கு உட்புறமாகவே மீன்பிடித்தனர். தற்போது நமது கடல் பகுதியின் கடல் வளம் குறைய, குறைய, நமது மீனவர்கள் எந்திரம் பொருத்திய படகுகளில் மீன் களை தேடி 30, 40 கடல் மைல் தூரம் பய ணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிலநேரம் மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர்.
உள்நாட்டுச் சந்தையின் தேவைக்காக பெரும் பகுதி உற்பத்தி செய்யப்பட்ட நமது மீன்பிடிப்பு முறை, புதிய பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசு நடைமுறைப்படுத்திய பின், அந்நியச் செலாவணி கையிருப்புத்தேவைக்காக நமது மீன்பிடிப்பு முறை, உள்நாட்டுச் சந்தையின் தேவையைப் புறக்கணித்து விட்டு, ஏற்றுமதிக்கான மீன் உற்பத்தி முறையை நோக்கி இந்திய அரசு வளர்க்க துவங்கியது.
பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழித்து முட்டை எடுத்த கதையாக, ஏற்றுமதித் தேவைக்கான மீன்களான, இறால் கனவாய், நண்டு, சிங்கி போன்ற மீன் இனங்களை அதிகமாக பிடிக்க, அதற்குரிய மீன்பிடி தொழில் நுட்பங்களை நார்வே போன்ற நாடுகளின் உதவியுடன் நமது மீனவர்களுக்கு கற்றுக்கொடுத்தது.
இன்று உலகத்தின் பெரும்பகுதி நாடுகள், நார்வே உட்பட அந்த தொழில்நுட்பம் அபாயகரமானது என கைவிட்டுவிட்டன. இந்திய அரசு மட்டும் ஏற்றுமதி நிறுவனங் களின் தேவைக்காக அந்தத் தொழில் நுட்பங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறது. அதில் ஒரு வகைத் தொழில் நுட்பம்தான் கொல்லிமடி என்கிற ராட்சஷ இழுவலை. இந்த வலைகளை சாதாரண சிறு ஏழை மீனவன் பயன்படுத்த முடியாது. இரண்டு நவீன விசைப்படகுகள் கொண்டு இந்த வலை வைத்து மீன்பிடிக்கும் முறைக்கு மூலதனமாக ரூ.40 முதல் 50 லட்சம் வரை தேவைப்படும். இந்த வலை தொழில் நுட்பத்தை தடை செய்யக்கோரி சிறு ஏழை மீனவர்கள் நீண்டகாலமாகப் போராட்டம் நடத்தினர். அவர்கள், உச்சநீதிமன்றம் வரை அணுகி இறுதியில் இந்த வலைக்கு 1996ஆம் ஆண்டு நிரந்தர தடை உத்தரவு பெற்றனர்.
தடையை அமல்படுத்தக்கோரி மீனவர்கள் பல போராட்டங்கள் நடத்தியும் தடையுத்தரவு 1996 முதல் இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. தடை உத்தரவை இன்று வரை அரசு அமல் படுத்தவில்லை.
இந்த வசதி படைத்தவர்களிடம், மீன் துறை நிர்வாகம், பல லட்ச ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, தடை செய்யப்பட்ட இந்த வலைகளை சிறு மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி பயன்படுத்த அனுமதிக்கிறது. இவர்கள் தினசரி டன் கணக்கில் மீன்கள் பிடிப்பதன் மூலம், சிறு மீனவர்கள் பிடித்து வந்த மீன் வளம், கட்டுப்பாடின்றி சீரழிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதி பாரம்பரிய சிறு மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளையில், இன்னொரு புறத்தில் இலங்கையில் தமிழ் மீனவர்கள் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசு விதித்த கடுமையான கட்டுப் பாடுகள் காரணமாகவும், உள்நாட்டு யுத்தத்தின் பொருட்டு, வெளிநாடுகளுக்கும், உள்நாட்டுக்குள்ளும் அகதிகளாக இடம் பெயர்ந்ததன் காரணமாகவும், அவர்களது மீன்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது உள்நாட்டுக் கலவரம் முடிவுக்கு வந்தபின், இலங்கை தமிழ் மீனவர்கள் பழையபடி சுதந்திரமாக தங்களது மீன்பிடிப்பைத் துவக்கியுள்ளனர். அவர்களது மீன்பிடிப்பு முறை வளர்ச்சி அடையாமல், இந்திய மீன்பிடிப்பு முறையை விட ஐம்பது வருடம் பின்தங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்ததன் மூலமும் இந்திய-இலங்கை கடல் பிராந்தியங்களில் இருநாட்டு அரசுகளும் அந்நிய மீன்பிடிக் கப்பல்களுக்கு, தங்குதடையற்ற மீன்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதன் மூலமும், மீன்பிடித் தொழிலில் மாபெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்வளம் குறைந்து இரு நாட்டு மீனவர்களும் மீன்களைத் தேடி எல்லை தாண்ட வேண்டிய சூழல் ஏற்படுவதுடன் இருநாட்டு மீனவர்களிடையே முரண்பாடாக மோதலுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.
மாற்று திட்டமும், மோடி
அரசின் வாய்ஜாலமும்,
இலங்கை கடற்படை உள்ளிட்ட பிரச்சினைகளில் துன்பப்படும் பாக் ஜலசந்தி மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 2016-ல் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2017-ல் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவிற்கு ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க வசதியாக 80 லட்சம் மதிப்பில் படகும், பரப்பு வலையும், தூண்டில், மீன்பிடி உபகரணங்கள் கொடுக்கப்படும் என்றும், திட்ட மதிப்பில் 50 %ரூபாய் பணம் மத்திய அரசின் மானியமாகவும், 20 % ரூபாய் மாநில அரசு மானியமாகவும், 20 % ரூபாய் வங்கிக் கடனாகவும், 10 % ரூபாய் மீனவர்கள் பங்களிப்பாகவும் அளிக்கப்படும் என்றும், திட்டத்தின் படி முதல் கட்டமாக பாக் ஜலசந்தியில் உள்ள விசைப் படகுகள் வருடத்திற்கு 500 வீதம் நான்கு வருடத்திற்கு 2000 விசைப் படகுகள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றி அமைப்பது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீனவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டிய நிலையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எட்டாக் கனியாக பாரம்பரிய மீனவர்களுக்குத் தெரிகிறது.
ஏனெனில் விலைவாசி ஏற்றத்தின் நிமித்தம் அரசின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் திட்டத்தின் இன்றைய மதிப்பு ரூபாய் 1 கோடியே 10 லட்சத்தைத் தொடுகிறது, அரசு இது சம்பந்தமாக மீனவர்களையும், படகுகள் கட்டும் நிறுவனங்களையும் அழைத்து 27 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த நிலையான தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசின் நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட 18 நிறுவனங்களும் அரசு கொடுத்துள்ள 80 லட்சம் திட்ட மதிப்பில் படகினை செய்ய முடியாது என கைவிரித்த நிலையில், எப்படியாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற நோக்கில், மிகவும் ஆர்வமுள்ள பணபலம் உள்ள சிலரை அழைத்துப் பேசி அதிகாரிகள் சம்மதிக்க வைத்துள்ளார்கள்.
இப்போதுள்ள நிலவரத்தின்படி மீன்பிடி உபகரணங்கள் தவிர்த்து படகு மற்றும் இன்ஜின் உள்ளிட்டவைகள் மட்டுமே அரசின் திட்ட மதிப்பீடான 80 லட்சத்தில் செய்து தருவதாக படகு தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே மீன்பிடி வலைகளும், சாதனங்களும் மீனவர்களே சொந்தப் பணத்தில் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்த பட்சம் 5 டன் வலைகளாவது இருக்கவேண்டும். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் மற்றும் சூறைமீன் தூண்டில் உபகரணங்களுக்கு ரூ.5 லட்சம் வேண்டும். ஆக மொத்தம் மேற்கொண்டு ரூ.30 லட்சம் வரை மீனவர்கள் செலவு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். மொத்தத்தில் மீனவர் பங்களிப்பாக இந்தத் திட்டத்தில் வங்கிக் கடனாக ரூ.16 லட்சமும், திட்ட பங்களிப்பாக ரூ.8 லட்சமும், உபரி பங்களிப்பாக ரூ.30 லட்சமும் ஆக மொத்தம் 54 லட்சம் மீனவர்கள் முதலீடு செய்தால் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலை உள்ளது.
இலங்கை கடற்படையால் தனது படகினையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்க்கும் பாரம்பரிய மீனவர்களால் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே இந்த ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது.
எனவே இந்தத் திட்ட மதிப்பினை ரூ.1 கோடியே 10 லட்சமாக உயர்த்த வேண்டும் அல்லது முன்பு இந்திய-நார்வே திட்டத்தின் கீழ் அரசாங்கமே படகுகள் கட்டி பாரம்பரிய மீனவர்களுக்கு கொடுத்தது போல் கொடுத்தால் மட்டுமே இந்தத் திட்டம் வெற்றிபெறும் என அரசிடமும், அரசு அதிகாரிகளிடமும் மீனவர்கள் முறையிட்டு வருகிறார்கள்.
ஆனால் இதற்கு மாறாக இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை என்றால், இந்தத் திட்டத்தை பிற இடங்களில் உள்ள வணிக ரீதியான மீனவர்களிடம் கொடுத்துவிடுவோம் என்று அதிகாரிகள் பாக் ஜலசந்தி பாரம்பரிய மீனவர்களை நெருக்குகிறார்கள். ஏற்கெனவே இறால் பண்ணைகள், மீனவர்களுக்கான மாற்றுமுறை மீன்பிடிப்பு முறை என அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்று பெருமுதலாளிகள் மட்டுமே கடற்கரைகளைக் கைப்பற்றி இறால் பண்ணை தொழில் செய்துவருகிறார்கள்.
அதுபோன்றே தற்போது பாரம்பரிய மீனவர்கள் செயல்படுத்த முடியாதவாறு ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அறிவித்து விட்டு, அதை மீனவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்று கூறி பாரம்பரிய மீனவர் அல்லாத பெருமுதலாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளை கொடுக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.
மத்திய அரசின் கொள்கை முடிவின் படி பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையால் துன்பப்படும் பாரம்பரிய மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடி வழிமுறை ஏற்ப்படுத்தவும், பாக் ஜலசந்தி பகுதியில் இழுவைப் படகுகளைக் குறைத்து, கடல்வளத்தை பாதுகாக்கவுமே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவர்களைத் தவிர்த்து பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்ற உள்ளடி வேலைகள் விரைவாக நடக்கிறது.
எனவே மத்திய அரசு, பாரம்பரிய மீனவர்கள் பலன்பெறும் வகையில் திட்ட மதிப்பை ரூ.1 கோடியே 10 லட்சமாக மாற்றவேண்டும் அல்லது இந்திய-நார்வே மீன்பிடி திட்டத்தில் கொடுத்தது போல அரசே ஆழ்கடல் மீன்பிடி படகினைக் கட்டி மீனவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தனது ராஜாங்க ரீதியான நிர்ப்பந்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வலியுறுத்தியும், கச்சத்தீவையொட்டியுள்ள இலங்கை கடல்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை பெற்றுத்தரக்கோரியும், இந்திய அரசு கடைப்பிடிக்கும் உலகமயம், தாராளமயம் போன்ற உழைக்கும் மக்களுக்கு விரோதமான பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாக, இந்திய கடல் பிராந்தியத்தில் அனுமதிக்கப்பட்ட அந்நிய மீன்பிடிக் கப்பலுக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஏற்றுமதியை நோக்கிய மீன் உற்பத் திக்காக இந்திய அரசால் வளர்த்து விடப் பட்ட, நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட கொல்லிமடி போன்ற வலைகளை முற்றிலுமாக தடுக்கக்கோரியும், மீனவர் கள் அணிதிரண்டு போராடுவதன் மூலமே இப்பிரச்சனைக்கு இறுதித்தீர்வு கிடைக்கும்.
கட்டுரையாளர்
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்
தொலைபேசி 9940817745

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக