செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

காரல்மார்க்ஸ் ஜென்னி காதல்

மார்க்ஸ் ஜென்னி

அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது."
-மார்க்ஸ்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

பண்டைய கால அன்னம் விடு தூது துவங்கி..மத்திய காலத்தில் கடிதம் என...தொடர்ந்து இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வாட்ஸ்அப் எஸ்.எம்.எஸ் வீடியோ கால் என காதலை பரிமாறிக் கொள்ளும் வடிவங்கள், பல்வேறு பரிமாணங்களை பெற்று வந்துள்ளன.. ஆயினும் இன்றைய மத்திய வயது உள்ள தலைமுறை கடிதப் போக்குவரத்தையும், டிஜிட்டல் யுகத்தையும் அனுப அனுபவித்தவர்கள்
குறிப்பாக காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ள கடிதம் அனுப்பும் முறை மிகவும் சுவாரசியமானது "காத்திருப்பு "எதிர்பார்ப்பு என மகிழ்ச்சி நிறைந்த தருணங்களை வார்த்தையால் சொல்ல முடியாது வைரமுத்துவின் கவிதை வரிகள் சொன்னதை போல் "தபால்காரன் தெய்வமாவான்" என்கிற வாசகம் காதல் கடிதத்தை எதிர்பார்த்திருக்கும் ஒரு காதலனுக்கு தான் தெரியும் இது சாமானிய மனிதனுக்கு மட்டுமல்ல இந்த உலகை மாற்றியமைக்க ஒரு புரட்சிகர தத்துவத்தை எழுதிய மார்க்ஸின் வாழ்க்கையில் இதுபோன்ற சுவாரசியங்கள் நிறைந்திருக்கும்
காணச்சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச்சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண்.
பால்யவயதில் அடாவடியாக சுற்றித்திரிந்த மார்க்ஸ், ஒரு பக்கம் வீட்டின் வறுமையில் சிக்கித்தவித்துள்ளார். ஆனால் ஜென்னியின் வீடோ பணக்கார குடும்பம். காரல் மார்க்ஸ் தன் உயர்படிப்பிற்காக படிக்கச்செல்லும்வரை அவருக்கு சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இருந்ததில்லை. அவருக்கு இருந்த ஒரே அக்கறை ஜென்னி மட்டும்தான். கல்லூரிக்கு சென்றவுடன் ஜென்னிக்காக மதுகுடித்துவிட்டு நண்பர்களுடன் காதல் பாட்டு, கவிதை, ஜென்னிக்கு காதல் கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜென்னியின் பதில் கடிதத்திற்காக காத்திருப்பார். இப்படி போய்க்கொண்டிருந்தவர் வாழ்ககையில்தான் சமூகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவரை காதலுடன் மட்டும் பயணித்த காரல், அதன்பின் சமுகத்தையும் தன்னுடன் சேர்த்து பயணிக்கத்தொடங்கினார்.

மார்க்ஸுக்கு படிப்பு முடிந்தது. இங்கு ஊரில் அழகியான ஜென்னியை திருமணம் செய்ய வரன்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஜென்னி அதை எல்லாவற்ரையும் நிராகரிக்கிறார். மார்க்ஸை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்கிறாள். நீங்கள் நினைப்பது போன்று இவர்கள் குடும்பத்தில் பணக்கார, ஏழை சண்டை எதுவும் இவர்கள் காதல் கதைகளில் இல்லை.
ஜென்னியின் அப்பாவுக்கு மிகவும்பிடித்தமான ஒருவர் காரல்மார்க்ஸ். ஜெனியின் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடிதான். ஆனால், மார்க்ஸின் வீட்டில்தான் பிரச்சனையே. மார்க்ஸின் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியிருந்தாலும் பூர்விகமாக யூதர்கள். அதுதான் இங்கு பிரச்சனையே, மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன் ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதா நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என சொல்லிவிட்டார். இதனையடுத்து காரல் மார்க்ஸ் ஜென்னியை திருமணம் செய்யவேண்டுமென்றால் முதலில் ஒரு வேலை ஒரு சின்ன சம்பாத்தியம் வேண்டும் என நினைக்கிறார். ஆதலால், ஜெனியிடம் எனக்காக காத்திரு நான் உன்னை வேலைகிடைத்தவுடன் அழைத்து செல்கிறேன் என்கிறார். ஜென்னியும் காத்துக்கொண்டே இருக்கிறாள் ஏழு வருடங்கள் ஓடிவிடுகிறது. பின்னர் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் வேலை கிடைக்க ஜெனியை திருமணம் செய்துகொள்கிறார், சில நிபந்தனைகளுடன். "நம் திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் சிறிய முறையில் தேவாலயத்தில் பதிவுசெய்தால் போதுமென்று" கூறுகிறார். வெறும் ஐந்து பேர் கொண்டு நடக்கிறது அவர்கள் திருமணம். பொதுவாக பெண்கள் தனக்கு திருமணம் ஆடம்பரமாக நடக்கவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இங்கு ஜென்னியோ "எனக்கு நீ கிடைத்தால் போதும், உன்னுடன் நான் வாழ்ந்தால் போதும்" என்று நினைத்திருப்பார் போல அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்.

இவர்களின் தேன்நிலவுக் கதைகளை கேட்டால் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். அதற்கு ஜெனியும் நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார். எத்தனை காதலிருந்தால் இப்படி ஒரு சொல் இங்கே வந்திருக்கும்.

ஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், உறக்கத்தில் கேட்டாலும் உரக்கச் சொல்லும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் கவிதைகள் மீது தீராத காதல் கொண்டவர். ஜென்னியின் தந்தை லுட்விக்கும் மார்க்ஸும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து போற்றுவார்கள்.

ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும். தன்னையும் மீறி மார்க்ஸினுள் இருந்த கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவே ஜென்னி, மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.


தத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்காகக் காதலியைப் பிரிந்தார். ஓர் ஆண்டோ... ஈராண்டோ அல்ல... ஏழு ஆண்டுகள். தங்களுடைய காதலுக்காக இருவருமே காத்துக்கிடந்தனர்.

எவர் சொல்லியும் மனந்தளராமல் இருந்த ஜென்னிக்கு... அவருடைய காதல் நாயகனிடமிருந்து வந்திருந்தன காதல் கடிதங்கள். அதில் ஒன்றை எடுத்து அவர் படித்தபோது... அவருடைய காதல் வலிக்கு அந்தக் கடிதம் மருந்திட்டிருந்தது.

"இனிவரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும்
காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்"

என்று வடித்திருந்த வரிகளால் ஜென்னியின் மனம் நிறைவடைந்தது.

மார்க்ஸை மணந்து, அவர் மனம்கோணாதபடி ஜென்னியும் இணைந்திருந்ததால்தான் கார்ல் மார்க்ஸால் வரலாற்றில் இடம்பிடிக்க முடிந்தது. தன் தாயாரின் மரணம் காரணமாக ஜெர்மனிக்குச் சென்றிருந்த ஜென்னியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத மார்க்ஸ்
'உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது.
எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்துபோவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.
ஒருமுறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக்கொண்டால்
போதும். என் இதயம் அமைதியாகிவிடும். அதன்பிறகு,
எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது''

என வேதனையுடன் கடிதம் எழுதினார்.

ஜென்னியும் தன் கணவருக்குத் துணையாக... அவருடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும் விதமாகக் கடிதம் எழுதுவார். இதேபோன்று, ஒருமுறை அவர்கள் இருவரும் பிரிந்திருந்த நேரத்தில்,

''...மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதாதீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரைகள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்குத் தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் லேசாக எழுதுங்கள். அன்பே... உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா, தடுக்கிவிழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமின்றி நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப்போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப்போல அவை சாகும். ஆனால், சரணடையாது''

என அவருடைய எதிர்கால சிந்தனை எப்போதும் தடைப்பட்டுவிடாத அளவுக்கு மார்க்ஸுக்குத் துணையாக இருந்தார் ஜென்னி.

மார்க்சும் ஜென்னியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தம்பதிகள் என்பது அவர்களை நன்கறிந்த எல்லோருடைய கருத்தாகும். குழந்தைகளை வறுமைக்கு இரையாக்கிய துன்பங்களோ, சோதனைகளோ அவர்களுடைய காதலை பலவீனப்படுத்தவில்லை; அதற்கு மாறாக, துன்பம் அவர்களுடைய அன்பை வலுப்படுத்தியது. அவர் மாணவப் பருவத்திலிருந்ததைப் போலவே முதிர்ச்சிக் காலத்தின் போதும் ஜென்னியை மென்மையாக, தீவிரமாகக் காதலித்தார்.

1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள். அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அக்கடிதம் மனித உணர்ச்சிக்குச் சிறந்த ஆவணம். அதில் மென்மையும் உணர்ச்சியும் இருப்பதுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருக்கிறது. மார்க்சின் ஆளுமைக்கும் காலப் போக்கில் முதுமையடையாத அவருடைய இளமையான காதலுக்கும் அக்கடிதம் அடையாளமாக இருக்கின்றபடியால் அதிலிருந்து நீண்ட மேற்கோளைத் தருவது பொருத்தமே.

“என் அன்பிற்கினியவளே,

நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிருப்பதும் அதை நீ அறிந்து கொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது…. "

"எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால் வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், ‘அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்’ என்று முணுமுணுக்கிறேன். ஆம், எக்காலத்திலும் காதலித்ததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். அது உண்மை. போலியான, உளுத்துப் போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப் போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல்தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே. இந்தப் போக்கிரிகளுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒரு பக்கத்திலும் உன் காலடியில் நான் கிடப்பதை மறு பக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே நீடிப்பார்கள்."

"…..ஒரு கனவில் என்னை விட்டு நீ போய்விட்டால் கூட காலம் என் காதலுக்குச் செய்த சேவை என்பதை நான் உடனடியாக அறிந்து கொள்வேன். சூரிய ஒளியும் மழையும் செடி வளர்ச்சியடைவதற்கு உதவி செய்வதைப் போன்றதே இது. நீ என்னைப் பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கின்ற காதல் அதன் மெய்யான வடிவத்தை, அதாவது பேருருவத்தை அடைகிறது; அதில் என்னுடைய ஆன்மாவின் முழுச் சக்தியும் என்னுடைய இதயத்தின் முழுப் பண்பும் குவிக்கப்பட்டிருக்கின்றன. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கிறேன். நவீனக்கல்வி முறையும் பயிற்சியும் நம்மிடத்தில் ஏற்படுத்துகின்ற பல்வகைத் தன்மையும், அகநிலையான மற்றும் புறநிலையான காட்சிகளை நாம் சந்தேகிக்க உபயோகிக்கின்ற ஐயுறவுவாதமும் நம் அனைவரையும் சிறியவர்களாக, பலவீனமானவர்களாக சிணுங்குபவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகச் செய்ய உத்தேசிக்கப்பட்டவை. ஆனால் காதல்-ஃபாயர்பாஹின் மனிதனிடத்தில் அல்ல, மொலிஷோட்டின் “வளர்சிதை மாற்றத்தில்” அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல, ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது."

"அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம். ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மெளனமாக இருப்பேன், ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே…."

“உலகத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழகானவர்கள் என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு சுருக்கத்திலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, மிகவும் இனிமையான நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த முகத்தை நான் மறுபடியும் எங்கே காண்பேன்? உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்யப்பட முடியாத இழப்புக்களை நான் காண்கிறேன்; உன்னுடைய இனிய முகத்தை நான் முத்தமிடுகின்ற பொழுது நான் துயரங்களை முத்தமிட்டு விரட்டுகிறேன். ‘அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று’ – அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம்; நான் பிதகோரசுக்கும் மறு பிறவியைப் பற்றி போதிப்பேன், கிறிஸ்துவ சமயத்துக்குத் திருமீட்டெழுச்சியைப் பற்றி அதன் போதனையைத் தருவேன்.”

வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகள் இறக்கும்போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றவர்தான் ஜெனி. இது ஆணாதிக்கத்தால் நடந்ததில்லை, மார்க்ஸ் ஜெனி மீதும், ஜெனி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த புரிதலினால் அமைந்தது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதில்லை, அவர்களே சிறுவயதிலிருந்து நண்பர்களாகி பின் வாழ்க்கை துணைவர்களாய் நிச்சயித்து கொண்டது. இது ஒரு புரிதலால் உண்டான இருவரின் கதை.


இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜெனி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அறையில் ஜெனியும், மறு அறையில் மார்க்ஸும் இருவரும் பார்க்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். ஜெனி இறந்து கல்லறையில் புதைக்கும் வரை மார்க்ஸை ஜெனியின் உடலை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை. அவளின் நோய் தொற்றிவிடும் என அஞ்சினர்கள். இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ். காதல் கடிதங்களில் ஆரம்பித்த அவர்களின் காதல், அதே காதல் கடிதத்தோடு முடிகிறது. . அதில் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியுள்ளார். நான்கு நாட்கள் கழித்து கல்லறையில் பூ வைத்திவிட்டு கண்ணில் நீர் வழிய கதறியிருக்கிறார். அதன் பின்னரும் சமூகத்துக்காக போராடவேண்டும் என சமூகப்பணிக்கு வந்திருக்கிறார் இருந்தாலும் மார்க்ஸின் நெருங்கிய நண்பரான ஹெங்கல்ஸ் கூறுகிறார்," ஜெனி இறந்த பின்பு, மார்க்ஸ் ஒரு ஆவியாக மட்டும்தான் இருக்கிறார்" என்று. ஒருவேளை தன் பாலிய வயதில் ஜெனியிடம் உரையாடிய ஷேக்ஸ் ஸ்பியர் காதல் கதைகளை கேட்டுக்கொண்டிருந்திருப்பாரோ? தன்னை விட நான்கு வயது பெரியவரான ஜெனி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், " நான் உன்னை குழந்தையாக இருக்கும்பொழுதிலிருந்து பார்த்து வருகிறேன் மார்க்ஸ்" என்று. மார்க்ஸ் என்ற மாமேதையை உலகறிய செய்த பெருமைக்கு அவரது சித்தாந்தங்கள் எப்படி ஒரு காரணமாக இருந்ததோ, அதேபோல ஜெனியும் ஒரு காரணமே...

தோழமையுடன்
சி.ஆர்.செந்தில்வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக