வெள்ளி, 5 செப்டம்பர், 2025

GST வரி விதிப்பில் இருந்து மீன் உணவு பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சி.ஆர்.செந்தில்வேல்

மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்கக் கோரி.

இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் எழுதிய கடிதம்

மாண்புமிகு,

மாண்புமிகு உங்களது தலைமையில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மீன் உணவுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிப்பு தொடர்ந்திருப்பது குறித்து எங்கள் கோரிக்கையை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாட்டின் உணவு உற்பத்தி, அன்னிய செலாவணி ஈட்டுதல், கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு எனப் பல துறைகளில் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய வாழ்வாதாரமாகத் தொடங்கிய இத்தொழில் இன்று வணிகரீதியாகவும் தேசிய பொருளாதாரத்தில் அத்தியாவசியமாகவும் திகழ்கிறது.

ஆனால் மீன்பிடி துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது:

அதிகப்படியான மீன்பிடித்தல்

சட்டவிரோத மற்றும் அழிவுக்குரிய தொழில்நுட்பங்கள்

கடல் வாழ்விட அழிவு

சுற்றுச்சூழல் பாதிப்புகள்

அரசு மானியக் குறைப்புகள்

இவற்றால் மீன்வளம் குறைந்து, மீனவர்கள் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மேலும் மீன் உணவு என்பது கெட்டுப்போகும் தன்மை கொண்ட பொருள். இதனை நீண்டகாலம் சேமிக்க இயலாததால், சாதாரண பண்டங்களைப் போல் நடத்தி ஜிஎஸ்டி விதிப்பது மீனவர்களுக்கும், நுகர்வோருக்கும் கூடுதல் சுமையாக உள்ளது.

மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் .

தற்போது பதப்படுத்தப்பட்ட மீன் உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்கள், மீன் வளர்ப்பு சாதனங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 5 சதவீத வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வந்து சிறிய ஆறுதலாக இருந்தாலும், தற்போது அமெரிக்காவில் இந்திய மீன் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரிவிதிப்பு செய்ததில் மீன் உணவு ஏற்றுமதி கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சீனா ஜப்பான் உள்ளிட்ட கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளை நம்பியே நமது மீன் உணவு ஏற்றுமதி உள்ளது , 

சர்வதேச சந்தையில் ஏற்படும் போட்டி, பல்வேறு நாடுகளின் சுங்கம் மற்றும் வரிவிதிப்பு முறை/ போக்குவரத்து செலவின உயர்வு போன்ற காரணங்களால் மீன் உணவு ஏற்றுமதி சரிவை சந்தித்து உள்ளது, தற்போதைய சூழலில் மீன் உணவு ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்கி மீன் உணவு ஏற்றுமதியை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது,

மேற்கண்ட பாதிப்புகள் அனைத்தும் இறுதியில் சாமானிய மீனவன் தலையில் கட்டப்படுகிறது, இந்த சூழ்நிலையை போக்க உள்நாட்டு மீன் உணவு பொருட்கள் நுகர்வை அதிகப்படுத்த வேண்டும், எனவே 

மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி, நாட்டின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் என்பதில் எங்களுக்கு உறுதி உண்டு.

அன்புடன்

சி.ஆர்.செந்தில்வேல்

நாள்: 05.09.2025

C.R.SENTHILVEL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக