ஒரு கருப்பு டைரி… இந்திய பிரதமர் எனும் தனிநபரைக் கடந்து நிற்கும் தேசிய அவமானம்.
(15.2.2026 ஜனசக்தி வார இதழில் சி.ஆர்.செந்தில்வேல் எழுதிய கட்டுரை)
சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, இந்திய அரசியலில் ஒரு பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஒரு சர்வதேசக் குற்றவாளியின் ஆவணங்களில் இந்தியப் பிரதமரின் பெயர் இடம்பெற்றிருப்பது, வெறும் அரசியல் சர்ச்சையாக மட்டுமல்லாமல், நாட்டின் கௌரவம் மற்றும் அதிகாரத்தின் நம்பகத்தன்மை குறித்த விவாதமாகவும் மாறியுள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர் இன்று உலகையே அருவருப்படையச் செய்யும் ஒரு குறியீடாக மாறியுள்ளது. பெரும் கோடீஸ்வரர், நிதி ஆலோசகர் என்ற முகமூடிக்கு பின்னால் அவர் மறைத்து வைத்திருந்த நிழல் உலகம், FBI-ன் அதிரடி விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்தது. 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் மட்டும், சுமார் 1000-க்கும் மேற்பட்ட மைனர் சிறுமிகளை ஏமாற்றியும் கடத்தியும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அமெரிக்க கன்னித் தீவுகளில் (U.S. Virgin Islands) அமைந்துள்ள லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் (Little Saint James) என்ற தீவையே எப்ஸ்டீன் விலைக்கு வாங்கினார். சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு ரகசிய இடமாக இருந்தது. இது பின்னாளில் ஊடகங்களால் "பாவங்களின் தீவு" (The Island of Sin) என்றும், "பாலியல் வன்கொடுமைத் தீவு" (Orgy Island) என்றும் அழைக்கப்பட்டது..
உலகின் பல நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட சிறுமிகளை இந்தத் தீவிற்கு அழைத்து வர எப்ஸ்டீன் ஒரு தனி ரகசிய விமானத்தைப் பயன்படுத்தினார். அதற்கு "லாலிடா எக்ஸ்பிரஸ்" என்று பெயர். இந்த விமானத்தில் உலகின் பல முக்கியத் தலைவர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் பிரபலங்கள் அந்தத் தீவிற்குப் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் எப்ஸ்டீனின் விமானப் பயணக் குறிப்பேட்டில் (Flight logs) உள்ளன..
அங்கு கொண்டு வரப்பட்ட சிறுமிகள் தீவை விட்டு வெளியேற முடியாதபடி சிறைவைக்கப்பட்டனர். அவர்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார். இவர்களைத் தனது அதிகாரமிக்க நண்பர்களுக்கும் 'பகிர்ந்து' கொண்டு, ஒரு சர்வதேசப் பாலியல் கடத்தல் சாம்ராஜ்யத்தையே அவர் நடத்தி வந்தார்.
பல ஆண்டுகாலப் புகார்களுக்குப் பிறகு, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI 2019-ல் எப்ஸ்டீனை வளைத்துப் பிடித்தது.
அவரது நியூயார்க் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், சிடிக்கள் மற்றும் ஒரு "கருப்பு டைரி" கைப்பற்றப்பட்டது.
அவர் பல உலகத் தலைவர்களைப் பாலியல் ரீதியாகச் சிக்க வைத்து, அவர்களை மிரட்டுவதற்காக ரகசியக் கேமராக்களைப் பயன்படுத்தியது FBI விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில் எப்ஸ்டீன் மூலம் பல முக்கிய நபர்களின் பெயர்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10, 2019 அன்று அவர் நியூயார்க் சிறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அவர் இறப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, அவரது அறையைக் கண்காணிக்கும் கேமராக்கள் செயலிழந்தது மற்றும் காவலர்கள் உறங்கியது பெரும் சந்தேகங்களை எழுப்பியது.
யார் காப்பற்றப்பட்டார்கள்?: எப்ஸ்டீன் உயிரோடு இருந்தால் உலகின் பல அதிபர்கள், இளவரசர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் பெயர்களைக் கூறிவிடுவார் என்பதால், அவர் 'கொல்லப்பட்டிருக்கலாம்' என்ற சந்தேகம் இன்றும் சர்வதேச அரசியலில் நிலவுகிறது.
இத்தகைய கொடூரமான குற்றப்பின்னணி கொண்ட ஒரு நபர், தனது மின்னஞ்சலில் இந்தியப் பிரதமரின் பெயர் இடம்பெறச் செய்ததுதான் தற்போதைய சர்ச்சைக்குக் காரணம்.
1000 சிறுமிகளைச் சீரழித்த ஒரு கிரிமினல், தனது குறிப்புகளில் ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி எழுதியிருப்பது அந்த நாட்டுக்கே நேர்ந்த அவமானம் என எதிர்க்கட்சிகள் சாடுகின்றனர்.
எப்ஸ்டீன் தனது வழக்கமான 'பிளாக் மெயில்' அல்லது 'பெயர் பயன்பாடு' (Name-dropping) உத்தியை மோடி விஷயத்திலும் பயன்படுத்தினாரா என்பதே இப்போதைய கேள்வி.
வெளியான எப்ஸ்டீனின் மின்னஞ்சல் குறிப்புகளில், 2017-ல் பிரதமர் மோடி மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தை எப்ஸ்டீன் தனது ஆலோசனையின் மூலம் ஒருங்கிணைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு பாலியல் குற்றவாளி, ஒரு நாட்டின் பிரதமரைத் தனது "ஆலோசனையின் கீழ்" இயங்குபவர் என்று உரிமை கொண்டாடுவது எப்படி?
ஒரு கிரிமினல் கும்பலின் தலைவனுக்கும் இந்திய வெளியுறவுத் துறைக்கும் இடையே மறைமுகத் தொடர்புகள் இருந்ததா?
இத்தகைய சர்வதேசக் கறைபடிந்த ஆவணங்களில் பெயர் வந்த பிறகு, தார்மீக அடிப்படையில் பிரதமர் பதவியில் நீடிப்பது முறையா என்ற கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
வரலாற்றில் இத்தகைய குறிப்புகள் ஏற்படுத்திய அதிர்வுகள்
மின்னஞ்சல் அல்லது டைரி குறிப்புகள் மட்டும் ஒருவரைத் தண்டிக்கப் போதுமானவை அல்ல என்றாலும், அவை ஒரு தலைவரின் பிம்பத்தை உடைக்க வல்லவை என்பதற்கு வரலாறு பல சான்றுகளைக் கொண்டுள்ளது
ஜெயின் ஹவாலா டைரி குறிப்புகளில் இடம்பெற்ற சுருக்க எழுத்துக்களுக்காக எல்.கே. அத்வானி போன்ற பிஜேபி மூத்த தலைவர் தற்காலிகமாகப் பதவிகளைத் துறக்க வேண்டியிருந்தது.
பனாமா பேப்பர்ஸ் ஆவணக் கசிவு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பதவியையே பறித்தது.
இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயர் வந்ததற்காகப் பிரிட்டன் இளவரசர் தனது அரச கௌரவங்களை இழக்க நேரிட்டது.
போஃபரஸ் டைரி குறிப்பும் பிஜேபியின் கடந்த கால அரசியலும்
போஃபர்ஸ் வழக்கில் சுவீடன் நாட்டு போஃபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் அர்ட்போ (Martin Ardbo) என்பவர் ஒரு டைரி வைத்திருந்தார்.
அந்த டைரியில் 'Q' என்ற எழுத்து பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. புலனாய்வில் அது ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பரான ஒட்டாவியோ குவாத்ரோச்சியைக் (Ottavio Quattrocchi) குறிப்பது கண்டறியப்பட்டது.
மேலும், அந்த டைரியில் "R" என்ற எழுத்தும் ஓரிடத்தில் வந்ததாகக் கூறப்பட்டது, அதை ராஜீவ் காந்தியுடன் தொடர்புபடுத்தி எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால் 'Q' என்பதுதான் அந்த வழக்கில் மிகப்பலமான ஆதாரமாகப் பார்க்கப்பட்டது. இதை அன்றை தினம் பிஜேபி வெறும் டைரி குறிப்பை வைத்து பெரும் அரசியலில் புயலை கிளப்பியது
ஊழல் தொடர்பாக விவாதிக்க அரசு மறுப்பதாகக் கூறி, பாஜக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து 1989-ல் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த போராட்டத்தின் விளைவாக 1984 தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, 1989 தேர்தலில் போஃபர்ஸ் எதிர்ப்பு அலையில் 85 இடங்களைக் கைப்பற்றியது .
அன்று ராஜீவ் காந்திக்கு எதிராக எந்த நேரடி ஆதாரமும் இல்லாதபோதும், ஒரு டைரி குறிப்பில் இருந்த 'Q' (குவாத்ரோச்சி) என்ற எழுத்தையும், குவாத்ரோச்சிக்கும் பிரதமருக்கும் இருந்த நட்பையும் வைத்தே பாஜக "பிரதமர் ஊழல்வாதி" என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தது.
"ஒரு குற்றவாளியின் டைரியில் உங்கள் நண்பர் பெயர் இருந்தால், நீங்களும் குற்றவாளிதான்" என்பது அன்று பாஜக-வின் வாதமாக இருந்தது. இதற்காக 100 எம்பிக்களை ராஜினாமா செய்ய வைத்து நாடாளுமன்றத்தையே முடக்கியது.
இன்று எப்ஸ்டீன் விவகாரத்தில் பாஜக "ஆதாரம் எங்கே?" ஒரு சர்வதேசக் குற்றவாளியின் (எப்ஸ்டீன்) மின்னஞ்சலில் பிரதமரின் பெயர் வந்திருப்பதை, "இது வெறும் ஒரு குற்றவாளியின் ஆதாரமற்ற உளறல்" என்று கூறி பாஜக நிராகரிக்கிறது. "வெறும் பெயர் இருப்பதாலேயே ஒருவரைத் தப்பு சொல்ல முடியாது, நிரூபிக்கப்பட்ட ஆதாரம் வேண்டும்" எப்ஸ்டீனின் 'வாடிக்கையாளர் பட்டியலில்' மோடியின் பெயர் இல்லை அதனால் மோடி சுத்த சுயம்பிரகாசம் என்று இப்போது தற்காப்பு வாதம் செய்கிறது.
குற்றவாளியின் ஆவணங்களில் பெயர் வந்தது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்பதை தாண்டி இத்தகைய சர்ச்சைகள் அதிகார மையங்களுக்கும் நிழல் உலக மாஃபியாக்களுக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
வரலாறு என்பது வெறும் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பல்ல; அது நிகழ்கால ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணி. போஃபர்ஸ் டைரி குறிப்புகளை வைத்து அன்று அறச்சீற்றம் கொண்டவர்கள், இன்று எப்ஸ்டீன் ஆவணங்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "அன்று அது அரசியல் தர்மம், இன்று இது வெறும் அவதூறு" என்ற இரட்டை நிலைப்பாடு ஜனநாயகத்தின் மாண்பைக் கேள்விக்குறியாக்குகிறது.
ஒரு நாட்டின் பிரதமரின் பெயர், சர்வதேசக் குற்றவாளி ஒருவரின் ரகசியத் தொடர்புகளில் இடம்பெறுவது என்பது வெறும் தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல; அது இந்திய இறையாண்மையின் மீதான கறை. மின்னஞ்சல் குறிப்புகள் மட்டுமே ஒருவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்கப் போதுமானவை அல்ல என்றாலும், அந்தச் சந்தேக மேகங்களை விலக்க வேண்டிய பொறுப்பு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்டு.
அரசியல் பிம்பங்கள் என்பது கண்ணாடியைப் போன்றவை; ஒரு சிறு விரிசல் விழுந்தாலும் அதன் உண்மைத்தன்மை சிதைந்துவிடும். அன்று 'Q' என்ற ஒற்றை எழுத்திற்காக ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே முடக்கிய வரலாறு, இன்று 'எப்ஸ்டீன் ஆவணங்களை' எப்படி அணுகப்போகிறது என்பதில்தான் இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சி அடங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும், விசாரணை என்பது தார்மீக அடிப்படையில் வெளிப்படையாக அமைய வேண்டும். அப்போதுதான் "சத்யமேவ ஜெயதே" (வாய்மையே வெல்லும்) என்ற நமது நாட்டின் தாரக மந்திரம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஜெப்ரி எப்ஸ்டீன் இறந்துவிட்டாலும், அவர் விட்டுச் சென்ற ஆவணங்கள் இன்றும் பல அதிகார மையங்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
நாள் 3.2.2026
செல்: 9940817745 கட்டுரையாளர்
சி.ஆர்.செந்தில்வேல்
. சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்
இராமேஸ்வரம்
. . இராமநாதபுரம் மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக