ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம்,2019



மத்திய அரசு கடந்த ஜூன் மாதத்தில் இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வரைவு நகலை வெளியிட்டு அதை கடலோர மாநிலங்களில் மீனவர்கள் மத்தியில் கருத்துகேட்பு கூட்டங்களை நடத்தி மீனவர்களின் கருத்துக்களை அறிந்து அதை சட்டமாக்க வேண்டும்,என உத்தரவிட்டது,
ஆனால் தமிழ் நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் பெயரளவில் ஆங்காங்கே ரகசிய கூட்டம் நடத்தி கடமையை முடித்து கொள்ளும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றனர்,
இந்த சட்ட முன்வரைவை பொறுத்தவரை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது காரணம்,
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக
மத்திய அரசு, 2009 இல் அறிமுகம் செய்த கடல் மீன்பிடித் தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்ட முன்வரைவை மீனவர்கள் இன்னும் மறக்கவில்லை
அச்சட்டத்தின்படி மீனவர்கள், ஐந்து கடல் மைல் தாண்டி, 12 கடல் மைல் தொலைவிற்குள்தான் மீன்பிடிக்க வேண்டும்.
அத்துடன், மீனவர் பதிவுகள், உரிமம் வழங்குதல், மீன்பிடித் தொழிலைக் கவனிக்கும் பணி போன்றவற்றை  மாநில மீன்வளத்துறையில் இருந்து பறித்து, கடலோரக் காவல்படைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் அந்தச் சட்டத்தின் மற்றொரு மோசமான பிரிவு ஆகும்.
மேலும் சிறிய மீனவர்கள் பத்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான மீன்களைப் பிடிக்கக் கூடாது; ஆனால், வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் சென்று எவ்வளவு மீன்களையும் பிடிக்கலாம் எனக் கூறப்பட்டது
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 6 இலட்சம் ரூபாய் முதல் 9 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; விதிமீறலில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள், வலைகளைப் பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படும்.என அதிரடி சட்டம் கொண்டு வரப்பட்டது, இச்சட்டத்தை மீனவர்கள் கடுமையாக எதிர்த்தனர், அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்,எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா மற்றும் அனைத்து அரசியல் காட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அன்றைய காங்கிரஸ் அரசால் அந்த சட்ட முன்வரைவு கைவிடப்பட்டது.
பத்து வருடங்களுக்கு பின் மோடி அரசு அதே சட்டத்தை வேறு நாசுக்கான வார்த்தைகளில்  முன்பை விட மோசமான சத்துக்களை உள்ளடக்கிய வகையில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.
இந்த 2019 சட்ட முன்வரைவு இந்திய மீனவர்களின் நலனை முன்னிறுத்தியோ"
இந்திய கடல் வளத்தை மேலாண்மை செய்தல் பற்றிய அக்கறையாலோ, கொண்டுவரப்படவில்லை,
மாறாக
1982 ல் சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்ட கடல் எல்லை  குறித்த ஒப்பந்த்திற்கு பின் இந்தியாவிற்கு 2.02 பில்லியன் சதுர கிலோமீட்டர் கடல்பரப்பு கொண்ட பிரத்தியோக பொருளாதார மண்டல கடல் பகுதி EEZ ( Exclusive economic zone)
உருவானது,
இந்திய கடல் மண்டலப் (EEZ) பகுதியில் எவ்வாறு மீன்பிடித் தொழில் செய்ய வேண்டும், எந்த வகை மீன்களை பிடிக்க வேண்டும்,
எந்த வகை சாதனங்களைப்  பயன்படுத்த வேண்டும் என்கிற வரையறைகளை சர்வதேச நாடுகளின் அமைப்பாக இருக்க கூடிய FAO என்று அழைக்க  கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புதான் தீர்மானிக்கிறது,
FAOவில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூடி 1995ல் ரோமில் உருவாக்கிய பொறுப்பார்ந்த  மீன்பிடிப்பிற்கான சர்வதேச நடத்தை விதிகளை இந்தியா ஏற்றுக் கொண்டது.
2001 ஆம் ஆண்டின் தோஹா சுற்று முதல் உலக வர்த்தக அமைப்பில் மீன்வள மானியங்கள் குறித்த முடிவுகளும், இந்தியாவின் மீன்பிடி கொள்கையை சர்வதேச கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது
இதன் தொடர்ச்சியாக
இந்தியா தனது மீன்பிடி கொள்கையை சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட மீன்பிடி ஒப்பந்தங்களில் அடிப்படையில், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு தனது தேசிய கடல் மீன்பிடி கொள்கையை உருவாக்கிய கொள்கிறது, அந்த வகையில் வரும் பத்தாண்டுகளுக்கு இந்திய மீன்பிடி கொள்கைகளை தீர்மானிக்க போகிற கொள்கைதான் கடந்த 2017 ம் வருடம்   உருவாகியுள்ள
கடல்சார் மீன் வளம் குறித்த தேசியக் கொள்கை,2017
(National Policy on Marine Fisheries, 2017) இந்த தேசிய கொள்கையின் பிரதான அம்சம் பாரம்பரிய முறையிலான மீன்பிடி தொழிலை அழித்து,
பணக்கார நாடுகளிலின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வர்த்தகம் சார்ந்த கார்ப்பரேட் மயமான மீன்பிடி தொழிலை இந்தியாவில் உருவாக்குவதுதான், இதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவில் நாட்டுப் படகுகள் விசைப் படகுகள் என இரண்டு லட்சம்  படகுகளும்,
2 கோடி மீனவர்கள் கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர்,இவர்களின் எதிகாலம் பற்றி பேசுவதைவிட   கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் உள்ள சூரை மீனை பிடிப்பது, கடலில் பண்ணை அமைத்து மீன்வளர்ப்பது அதற்காக கடல்பரப்பில் பிளாட் போட்டு தனியாருக்கு கொடுப்பது போன்ற விசயங்களைதான் தேசிய கொள்கை அதிகம் பேசுகிறது,
இந்த தேசிய கொள்கையை பின்பற்றிதான், 2019 சட்ட முன்வடிவு  கொண்டுவரப்பட்டுள்ளது,
சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் பொழுதோ அல்லது இந்தியாவிற்கான மீன்பிடி கொள்கையை உருவாக்கும் போதோ, மீனவர்களிடமோ, அல்லது நாடாளுமன்றத்திலோ, கருத்து கேட்பதில்லை,
அரசாங்கம் தன்னிச்சையாக கையெழுத்திடுவது, கொள்கைகளை உருவாக்கிக்கொள்வது,
ஆனால் கடைசியில் அதை அமல்படுத்த அதிகாரமிக்க சட்ட வடிவங்களை கொண்டு வரும் போது மட்டும் மக்களிடம் கருத்து கேட்கும் நாடகத்தை நடத்துகிறது,
தற்போது மத்திய அரசு கொண்டு வரும் சட்டம்,
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 கடல் மைல் கொண்ட
பிராந்திய பகுதி கடல் நீருக்கு அப்பால் உள்ள 200 கடல் மைல் தூரம் கொண்ட பிரத்தியேக பொருளாதார மண்டல EEZ ( Exclusive economic zone)
பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக விதி முறைகளை வகுக்க இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கடலோர மாநில அரசுகளும் தங்களது பிராந்திய கடல் பகுதிகளை நிர்வாகம் செய்ய தங்களுக்கென்று மாநில அளவிலான சட்டங்களை இயற்றி நிர்வகித்து வருகிறது, தமிழகத்திலும், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983,  நடைமுறையில் உள்ளது,
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மீனவர்கள் இதுபோன்ற மாநில அரசுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு தங்களது மீன்பிடித் தொழிலை பிராந்திய கடல் பகுதி மட்டுமல்லாமல் இந்தியாவினுடைய பொருளாதார மண்டலங்களை (EEZ) நோக்கியும் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்,
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தற்போது கொண்டு வருகிற இந்த சட்டத்தின் மூலம் 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள  ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்றால்,
மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்..!
அதனுடைய சாராம்சம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான சிறு மீனவர்கள் 12 கடல் மைல் தூரம் கொண்ட பிராந்திய கடல் எல்லையை தாண்ட கூடாதென 2009 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை மீண்டும் இந்த 2019ஆம் ஆண்டு சட்ட முன்வடிவு வலியுறுத்துகிறது.
மேலும் பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்க வேண்டுமென்று   சொன்னால் மத்திய அரசு அறிவிக்கும் கடல்வள மேலாண்மை திட்டங்களுக்கு உட்பட்டும், சர்வதேச மீன்பிடி கொள்கைகளுக்கு உட்பட்டும், மீன் பிடிக்க வேண்டும்..! இல்லை என்றால் அனுமதி இல்லை..!
அத்துடன் மீன் பிடிக்கிற ஒவ்வொரு படகும் மீன் பிடித்தலுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு இந்த சட்டத்தின் மூலம் கொண்டு வருகிறது மீன்பிடி தொழிலை பொருத்தவரைக்கும் விவசாயத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தொழில் நாட்டினுடைய உணவுத் தேவையைப்  பூர்த்தி செய்கிற ஒரு தொழில், இந்த தொழிலுக்கு உலக நாடுகள் முழுவதும் மானியங்கள் கொடுத்து ஊக்குவித்து, கொண்டிருக்கும்போது இந்திய அரசு மீன்பிடி தொழிலுக்கும் பிடிக்கின்ற மீனுக்கும்,  கட்டணம் நிர்ணயிப்பது ஆச்சரியத்தையும்,அதிர்ச்சியையும், ஏற்படுத்துகிறது, ஏற்கனவே மத்திய அரசின் GST,வரிவிதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் மீன்பிடித்தொழில் மேலும் அழிவை நோக்கி  போகும் என்பதில் ஆச்சரியமில்லை"
மேலும் பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்கக் கூடிய படகுகளின் தரம் அளவு போன்றவை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது குறிப்பாக இந்திய வாணிப கப்பல் சட்டம் 1958 கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு மட்டும்தான் அனுமதி கிடைக்கும்..!
அனுமதி இல்லாமல் மீன் பிடித்தாலோ அல்லது மத்திய அரசு கொண்டு வரும்  மீன் வள மேலாண்மை திட்டங்களை மீறினாலோ   மீனவர்களுக்கு அபதாரம் மற்றும்  தண்டனை கொடுப்பது என்று  இச்சட்டம் கூறுகிறது,
ஆனால் அபதார தொகை எவ்வளவு? தண்டனை என்றால் சிறை தண்டனையா? அல்லது வேறுவகையான தண்டனை ? என்று சொல்லாமல்   இந்த சட்டம் கள்ளமௌனம் காக்கிறது,
மீன்பிடி தொழிலின் போது படகுகளை சோதனை செய்கிற அதிகாரத்தை மீன்வளத் துறையிலிந்து   இந்திய கடலோர காவல் படைக்கு  இச்சட்டம் அதிகாரத்தை கைமாற்றி கொடுக்கிறது..! கூடுதலாக இச்சட்டத்தை அமலாக்கம் செய்ய தனி ஆணையம் அமைக்க வேண்டும் என மசோதா பரிந்துரைக்கிறது,
சோதனையிட வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் இந்திய மீனவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும் வெளிநாட்டு மீனவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் விதிக்கலாம் என்கிற சரத்தும் இச்சட்டத்தில் உள்ளது ,
உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க
'தண்டனை', 'அபராதம்', 'கைது', 'பறிமுதல்' என மீனவ மக்களை அச்சுறுத்தக்கூடிய வார்த்தைகள் தான் மேற்படி சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளன. மக்களுக்கு நன்மை புரிவதற்காக சட்டம் இயற்றப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மக்களை துன்புறுத்துவதற்காகவே சட்டம் இயற்றப்படும் என்பதை மத்திய அரசு தனது இந்தச்சட்ட முன்வடிவின் மூலம் நிரூபித்து இருக்கிறது.
இந்திய எல்லையில் அனுமதிபெற்று மீன்பிடிக்கும்  பன்னாட்டு கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்று  தனி சட்டம் உள்ளது, அச்சட்டத்தின் பெயர் இந்திய கடல் மண்டலத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் மீன் பிடித்தலை ஒழுங்கமைப்பு செய்யும் சட்டம் 1981,  தற்போது அச்சட்டம் ரத்து செய்யப்பட்டு மத்திய அரசு இப்போது கொண்டு வருகிற இந்த சட்டத்தின் மூலமே   வெளிநாட்டு கப்பல்களை ஒழுங்கு படுத்த  வழிவகை செய்கிறது,
LOP (Letter of Permission) மூலம் பன்னாட்டு மீன்பிடி கப்பல்கள் இந்திய அரசிடம் அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன அதை போக்கி ஒற்றை சாரள (single window system) முறையிலான வசதியை செய்து
எந்த விதத் தங்கு தடையுமின்றி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இந்திய நாட்டு எல்லைக்குள் வந்து இந்திய மீன்வளத்தை கொள்ளையிட இந்திய அரசின் பல்வேறு கொள்கைகள் வழி வகுக்கிறது, அதில் எவ்வித மாற்றமும் செய்ய முன்வராத நமது மத்திய அரசு,இந்திய மீனவர்களுக்கு மட்டும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து பாரம்பரிய மீனவர்களை அழிவு நிலைக்கு கொண்டு செல்கிறது,
மொத்தத்தில்
வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில் கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே நிதர்சன உன்மை ,
தோழமையுடன்
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத்தொழிலாளர் சங்கம்,
இராமேஸ்வரம்.
தொடர்புக்கு: 9940817745

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக